சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேரையும் வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்களை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்ய, பல முக்கிய புள்ளிகள் பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் குட்கா உற்பத்தியாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மற்றும் விற்பனை செய்ய அரசு தரப்பில் ஆதரவாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவகுமார் மற்றும் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனைவரையும் சிபிஐ அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் நீதிமன்ற காவல் முடிந்து 6 பேரும் நேற்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேரையும் வரும் நவம்பர் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி