×

நினைவிடம் அமைப்பதை எதிர்த்து வழக்கு தண்டனை கைவிடப்பட்டதால் ஜெயலலிதா குற்றவாளி இல்லை: ஐகோர்ட்டில் அரசு தரப்பு பதில் மனு தாக்கல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று ஐகோர்ட்டில் அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 50 கோடியில் நினைவிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா குற்றவாளி என்றும் அவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் எனக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ஜி. ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தார்.

 பதில் மனுவில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட 2016 டிசம்பர் 7ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டு, 2018 ஜனவரி 10ம் தேதி 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  மே 7ம் தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் மற்ற மூவர் மீதான தண்டனை உறுதிசெய்யப்பட்டாலும், அப்போது ஜெயலலிதா இறந்துவிட்டதால் தண்டனை கைவிடப்பட்டது.   இன்றைய தேதியில்  ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என்பதால், அவருக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக அரசு, தன் அதிகார வரம்புக்கு உட்பட்டுதான் முடிவெடுத்துள்ளது.

மேலும், மாநில கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெற்ற பிறகே  நினைவிடம் கட்டுவதால் எந்த விதிமீறலோ, சட்டவிரோதமோ நடைபெறவில்லை.ஏற்கனவே, சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் வைத்ததை எதிர்த்த மனுவும் தலைமை உயர் நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்சில் தள்ளுபடியானது.அதேபோல இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதிடவுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 12ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,Court , Memorial, High Court, Jayalalithaa
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...