கொழும்பு : இலங்கையின் புதிய பிரதமராக, ராஜபக்சே நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வசதியாக, வரும் 16ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு, அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா இன்று கடிதம் எழுதியுள்ளார். இதனை அடுத்து இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க அதிபர் மைத்ரிபால சிறிசேன நேரம் ஒதுக்கியுள்ளார்.
முன்னதாக ரணில் விக்ரமசிங்கே பதவி பறிப்புக்கும், நாடாளுமன்ற முடக்கத்திற்கும் சபாநாயகர் ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல, பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை எனவும், பெரும்பான்மை பலம் தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே கூறி வருகிறார். இதன் காரணமாக இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இலங்கையில் நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தி நேற்று பெரும் அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை இன்று மாலை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி