×

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் துறவி பிரக்யா உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

மும்பை: மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் மாலேகாவ் என்ற இடத்தில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மசூதி அருகில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை ஆரம்பத்தில் விசாரித்தது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித், பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், அஜய் ரஹிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். புரோஹித் கைது செய்யப்படும் போது ராணுவ அதிகாரியாக இருந்ததால் அவர் மீது வழக்கு தொடர மாநில தலைமைச் செயலாளர் 2009ம் ஆண்டு ஜனவரி 19ம்தேதி அனுமதி வழங்கினார்.
ஆரம்பத்தில் இவர்கள் மீது மகாராஷ்டிரா குற்றத்தடுப்பு (மொக்கா) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப்படை விசாரித்து வந்தது. பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது.

2016ம் ஆண்டு மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதோடு இவ்வழக்கில் இருந்து பிரக்‌யாசிங் தாக்கூர், ஷியாம் சாஹு, பிரவீன், சிவ்நாராயண் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவர்களை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி கேட்டுக்கொண்டது. ஆனால், பிரக்‌யா சிங் தாக்கூர் தவிர மற்ற மூன்று பேரையும் இவ்வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. அதோடு மட்டுமல்லாது குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மொக்கா சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்த சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது.

இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் பல்வேறு நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, விசாரணை நீதிமன்றம் நேற்று இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது. இதனால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கில் குற்றம் நிரூபணமானால் அதிகப்பட்சம் ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Malegaon ,sisters ,murder ,Priya , Malegaon blast, woman saint Pragya, the charge of the charge
× RELATED சொல்லிட்டாங்க…