சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் தலைமை கழக நிர்வாகி வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் பிந்தைய நகர்வுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களின் கோரிக்கையை தினகரன் தரப்பினர் நிராகரித்ததையடுத்து அதிமுக தலைமையகத்தில் திடீர் ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி