திருவனந்தபுரம்: கேரளாவில் கொச்சி தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 7 தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்பட பிராமணர்கள் அல்லாத 54 பேர் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் முதல்முறையாக கடந்த ஆண்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஒரு தலித் உள்பட பிராமணர் அல்லாத 36 பூசாரிகள் நியமிக்கப்பட்டனர்.
மேலும் படிப்படியாக கேரளா முழுவதும் பிராமணர் அல்லாத பூசாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கொச்சி தேவசம் போர்டு கோயில்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்ைத சேர்ந்த 7 பேர் உள்பட பிராமணர்கள் அல்லாத 54 பூசாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அரசு தேர்வாணையத்தைப்போல், தேவசம் போர்டு தேர்வாணைய குழுவால் எழுத்து மற்றும் நேர்முக தேர்வு நடத்தி நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 54 பூசாரிகளில் 31 பேர் தகுதி அடிப்படையிலும், மற்றவர்கள் இட ஒதுக்கீட்டிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி