பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த சோமங்களம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (30). இவரது மனைவி சத்யா (25). ரவிக்குமாரின் நண்பர் அனகாபுத்தூர் ஜேஎன் சாலையை சேர்ந்த ராஜேஷ். இவர், ரவிக்குமாரை பார்க்க அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, ரவிக்குமாரின் மனைவி சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ரவிக்குமார் வீட்டில் இல்லாத நேரம், சத்யா ராஜேஷை தனது வீட்டிற்கே வரவழைத்து, இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதுபற்றி அறிந்த ரவிக்குமார், மனைவி மற்றும் ரவிக்குமாரை எச்சரித்துள்ளார்.
இதனால், கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டைவிட்டு வெளியேறிய சத்யா, ராஜேஷுடன் தனியாக வீடு எடுத்து, வசித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார், நேற்று காலை தனது நண்பர்களான பாஷா (23), சிவா (24) ஆகியோருடன், ஜீவானந்தம் (28) என்பவரது ஆட்டோவில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தனது மனைவி சத்யா தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கு, ராஜேஷை சரமாரியாக வெட்டினார். தடுக்க முயன்ற சத்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால், ரவிக்குமார் அங்கிருந்து தப்பினார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், ராஜேஷ் மற்றும் சத்யாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ரவிக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி