சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 16வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் தவைர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன். முன்னாள் எம்பி விஸ்வநாதன், பொதுச்செயலாளர் தணிகாசலம், மாவட்ட தலைவர்கள் அரும்பாக்கம் வீர பாண்டியன், எம்.எஸ்.திரவியம், திருவான்மியூர் மனோகரன், கராத்தே ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்பிறகு திருநாவுக்கரசர் அளித்த பேட்டி: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு செய்யாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படலாம். ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் பணம், பதவிக்காக அரசியலுக்கு வர வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி நடைபெறவில்லை. எம்எல்ஏக்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது. தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கும் இரட்டை இலைக்கும்தான் வாக்களித்தனர்.
எடப்பாடிக்கும் ஓபிஎஸ்சுக்கும் வாக்களிக்கவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை குறித்து பாஜ தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். இது மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமாகும். தமிழக காங்கிரஸ் கட்சியினரின் ஒற்றுமை குறித்து பேச தமிழிசைக்கு தகுதி இல்லை. தமிழக காங்கஸ் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி