சென்னை: சென்னை பல்கலைக்கழக லட்சுமணசாமி முதலியார் நினைவு 51வது தடகள விளையாட்டு போட்டியின் ஆண்கள் பிரிவில் டிஜி வைஷ்ணவா கல்லூரியும், மகளிர் பிரிவில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியும் சாம்பியன் பட்டம் வென்றன. நேரு விளையாட்டரங்கில் கடந்த 24ம் தேதி தொடங்கிய இத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளை சேர்ந்த 700 வீரர்கள், 500 வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் 7 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் வென்ற வேளச்சேரி டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. லயோலா கல்லூரி 6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் வென்று 2ம் இடம் பிடித்தது.
மகளிர் பிரிவில் 14 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் வென்ற நுங்கம்பாக்கம் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. எத்திராஜ் கல்லூரி 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கல பதங்கங்களுடன் 2ம் இடத்தை பிடித்தது. விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த பி.நித்தின் 100மீட்டர் தூரத்தை 10.4 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றதுடன் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார். எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவி ஜா 100 மீட்டர் தூரத்தை 11.7 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றதுடன் மாணவிகள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் துரைசாமி, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், கேடயங்களையும் வழங்கி பாராட்டினார்
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி