புதுடெல்லி: ‘‘அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் சம அளவிலான தொகுதியில் பாஜவும், ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிடும்’’ என்று பாஜ தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் இம்மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளை பங்கீடு செய்வது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா நேற்று பீகார் சென்று நிதிஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது, அமித்ஷா கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வும், ஐக்கிய ஜனதா தளமும் பீகாரில் உள்ள மக்களவை தொகுதிகளில் சம எண்ணிக்கையில் போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அடுத்த 4 நாட்களில் அறிவிக்கப்படும். மேலும், கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி, உபேந்திரா குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி