வேலூர் : வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே அம்மூர் காப்புக்காடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.25 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநில எல்லையில் உள்ள தாடூர் என்ற இடத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை வனக்குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போது சுமார் 1.25 டன் எடையுள்ள 55 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து ராணிப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இவை ஏ1 என்ற முதல் ரக செம்மரக்கட்டைகள் என்பதால், ஆந்திர மாநிலம் சேஷாச்சல வனப்பகுதியில் வெட்டி கடத்தியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி