சென்னை: சென்னை தீவுத்திடலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னரே பட்டாசு விற்பனையை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமலலாது சென்னையைச் சேர்ந்த முனியாண்டி என்பவரால் தொடரப்பட்ட இந்த பொதுநல வழக்கையும் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் மெகா தீபாவளி சேல் என்ற முறையில் விற்பனை நடைபெறுகிறது. இதற்காக தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகமும் தமிழக அரசும் சேர்ந்து பட்டாசு விற்பனைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது.
இதற்காக டெண்டரும் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 20 முதல் நவம்பர் 7 வரையிலான பட்டாசு விற்பனைக்கான டெண்டரில் விதிமுறைகள் முறையாக பின்றபற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மனுதாரர் நீதிமன்றத்தை நாடினார். குறிப்பாக கடந்த 2014ம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் கடைகள் அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல வழிமுறைகளை உருவாக்கியிருந்தது. ஒரே வரிசையில் கடைகள் அமைக்கப்பட வேண்டும், கடைகளுக்கு இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
தீப்பிடிக்காத வகையில் பாதுகாப்பான முறையில் கடைகள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல உணவகம் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் உள்ள இடத்திற்கும் பட்டாசு கடைகளுக்கு குறைந்தபட்சம் 20 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதை அரசு, காவல்துறை மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் கண்காணிக்க வேண்டும் என மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் ஜெயக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் ஒவ்வொரு ஆண்டும் அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்றியே பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தார். இதுவரை எவ்விதமான விபத்து சம்பவங்களும் நடைபெறவில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். குறிப்பாக இந்தாண்டுக்கான டெண்டர் விடப்பட்டதன் முறைகள் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டுள்ள விதங்கள் குறித்த உரிய படங்களுடனும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றக்கொண்ட நீதிபதிகள், ஜெயக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு இந்த வழக்கை முடித்துவைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி