திருமலை: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டியுடன் செல்பி எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்திய ரெஸ்டரென்ட் ஊழியரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத் செல்வதற்காக நேற்று மதியம் விசாகப்பட்டினம் விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலைய ரெஸ்டரென்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் செல்பி எடுப்பது போல் நடித்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெகன் மோகன் ரெட்டியை குத்தினார். இதில் அவரது இடது கை தோள்பட்டை அருகே கத்தி குத்து விழுந்தது. திடீர் தாக்குதலால் நிலை குலைந்த ஜெகன் மோகன் ரெட்டி சத்தம் போட்டார். இதை கண்ட அவரது பாதுகாவலர்கள் அந்த ஊழியரை மடக்கி பிடித்தனர்.
இந்நிலையில், கத்திக்குத்தில் ரத்த காயம் அடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக ஐதராபாத்திற்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். பிடிபட்ட நபரிடம் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்ட நபர் ரெஸ்டரென்டில் கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிவதும், அவர் பெயர் சீனிவாஸ் என தெரிந்தது. இவர் ஏதற்காக ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தினார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்த பயன்படுத்திய கத்தி சேவல் சண்டையின் போது அதன் கால்களில் கட்டப்படும் கத்தி என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.னிவாஸ் இந்த கத்தியை விமான நிலையத்திற்குள் எப்படி கொண்டு வந்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
‘தீவிர ஆதரவாளர்’அண்ணன் பேட்டி
ஜெகன் மோகன் ரெட்டியை கத்தியால் தாக்கிய னிவாசின் அண்ணன் சுப்புராஜ் கூறுகையில், ‘‘னிவாஸ் ஜெகனின் தீவிர ஆதரவாளர். எங்கள் வீட்டில் கடந்த பொங்கலன்று 6 அடி உயரத்தில் ஜெகனும், னிவாசும் சேர்ந்து வாழ்த்து தெரிவிப்பது போன்ற பேனர் வைத்து இருந்தான். தீவிர ஆதரவாளரான னிவாஸ் அவரை கத்தியால் தாக்க முயன்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை என்றார்.
கோழைத்தனமான செயல்
கத்தி குத்து சம்பவம் குறித்து ஜெகன் மோகன்ரெட்டி தனது டிவிட்டரில், ‘அனைவரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்று கவலை கொண்டுள்ளனர். அனைவருக்கும் இதை தெரிவிக்க விரும்புகிறேன். கடவுளின் அன்பு மற்றும் ஆந்திர மக்களின் ஆசிர்வாதத்தால் நலமாக உள்ளேன். இதுபோன்ற கோழைத்தனமான செயல்களினால் என்னை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.
போலீஸ்தான் காரணம்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா கூறுகையில், ‘`போலீசாரின் அலட்சியத்தால் ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடந்துள்ளது. அந்த கத்தி சாதாரண கத்தியா? அல்லது விஷம் தடவப்பட்டதா? என்று தெரியவில்லை. ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாதயாத்திரை மூலமாக பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமல் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உரிய பதிலை தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
சிஐஎஸ்எப் போலீசிடம் விசாரணை
ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த தாக்குதல் குறித்து ஆந்திர மாநில டிஜிபி ஆர்.பி.தாக்கூர் கூறுகையில், ‘‘தாக்குதல் நடத்திய வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர், கிழக்கு கோதாவரி மாவட்டம், மும்மடிவரம் மண்டலம், தானேலங்கா கிராமத்தை சேர்ந்த னிவாஸ்(30) என்பது தெரியவந்தது. ஜெகன் விமான நிலையத்துக்கு வந்தவுடன் டீ வழங்க சென்ற னிவாஸ் அவரது அருகில் சென்று செல்பி எடுப்பது போல் நடித்து, தனது பாக்கெட்டில் இருந்து கத்தியை எடுத்து இடது கையில் குத்தியுள்ளார். முழு விசாரணைக்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படும்.
விமான நிலையம் முழுவதும் சிஐஎஸ்எப் வீரர்களால் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களை மீறி இந்த வாலிபர் எப்படி கத்தியை கொண்டு சென்றார் என சிஐஎஸ்எப் போலீசாரிடமும் விசாரணை நடத்தப்படும்’’ என்றார். ஆந்திர மாநில அமைச்சரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான லோகேஷ் தனது டிவிட்டரில், ‘விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கத்தியால் தாக்கிய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது’ என தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி