சென்னை: புதிய சோமஸ்கந்தர் சிலையில் நடந்த முறைகேடுகளை தொடர்ந்து அந்த சிலை தற்போது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்சபூத தலங்களில் மண்தலம் ஆகும். இங்கு சுமார் 1600 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொன்மையான உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை இருந்தது. இந்த சிலையை மாற்றிவிட்டு புதிய சிலை செய்ய 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர், கோயில் ஸ்தானிகர்கள் உள்ளிட்டோர் தன்னிச்சையாக முடிவெடுத்தனர். இதில் தங்கம் தொடர்பாக புகார் எழுந்ததால் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிலைகடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் சிலைகளை ஆய்வு செய்தபோது சிலையில் எள்ளளவும் தங்கம் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். எனினும் பிரச்னைக்குரிய புதிய சிலைதான் தற்போது மக்களின் வழிபாட்டில் இருந்து வந்தது. புகாரின் காரணமாக அந்த சிலையில் எவ்வளவு தங்கம் உள்ளது மற்றும் சிலையின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். எனவே, அந்த சிலையை கும்பகோணத்தில் உள்ள சிலை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைக்க வேண்டும். எனவே, மக்கள் வழிப்பட்ட புதிய சிலையை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு பாலாலயம் செய்ய வேண்டும். அதன் பிறகே பீடத்தில் இருந்து சிலையை அகற்ற முடியும். மேலும் அதே இடத்தில் பழைய சிலையை வைக்க வேண்டும்.
இதற்காக கடந்த அக்.20ம் தேதி புதிய சோமாஸ்கந்தர் சிலைக்கு கோயில் அர்ச்சகர்கள் சுமார் 10 பேர் பாலாலயம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று (அக்.25, வியாழக்கிழமை) கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஒப்படைக்க புதிய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலையை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், செயல் அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் அதிகாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்த புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலையை பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி