×

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  2006-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி  முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட இந்த அனுமதி குறித்து சிபிஐ , அமலாக்கப்பிரிவினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ரூ.600 கோடி அளவிலான அன்னிய  முதலீடுகளுக்கு மட்டுமே நிதி அமைச்சகம் நேரடியாக அனுமதி அளிக்க முடியும். அதற்கு மேலான தொகைக்கு பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க முடியும். ஆனால், இதை மீறி  அனுமதி அளிக்கப்பட்டதாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டுகின்றன.

இந்த அனுமதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் மறைமுகமாக செயல்பட்டதாகவும், கட்டணமும் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு  செய்த சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் டெல்லி, சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் வீடுகளில் சோதனை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் ரகசிய அறிக்கையை  அமலாக்கப்பிரிவினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கிறது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த 8-ம் தேதி ப.சிதம்பரம் ஆஜரானதையடுத்து முன்ஜாமீன் மீதான மனுவின்  விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைதுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நவம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  இந்நிலையில்  ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aircel ,Maxis ,P. Chidambaram , Aircel-Maxis case, P. Chidambaram, enforcement department, filing chargesheet
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...