மதுரை: எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானதும் ஆட்சி கவிழ்ந்து விடாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மகளிர் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். பேரணியை துவக்கி வைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற துரோகிகள், இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என ஒரு வாரம், ஒரு மாதம், 10 மாதம் என கெடு விதித்து ஆருடமாக கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன், இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என தற்போது கூறி வருகின்றனர். அவர்களின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி, கட்சியை கைப்பற்றி அந்த குடும்பம் வாழ வேண்டும் என பேராசையுடன் செயல்பட்டனர். அதற்கு கட்சியில் எதிர்ப்பு வந்ததால் போராடி வருகின்றனர். எங்களுக்கு திருப்பரங்குன்றத்தில் வேல் கிடைத்துள்ளது. இந்த வேல் மூலம் அந்த கும்பலை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி