×

ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் கோயில் செல்ல எளிய பாதை ஏற்படுத்தப்படுமா?

திருச்சி : பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர்த்தலமான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் பகுதியினர் திருவானைக்காவல் கோயிலுக்கும் வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது பெருகிவிட்ட வாகன போக்குவரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், பார்க்கிங் வசதி இல்லாததாலும் தற்போது சுற்றுலா வாகனங்கள் திருவானைக்காவல் கோயிலுக்கு வருவது இல்லை. இக்கோயில் மேற்கு நோக்கிய சன்னதி கொண்டதாகும். கோயில் சன்னதி வீதியும் மேற்கிலேயே அமைந்துள்ளது. இதையடுத்து கோயிலுக்குள் செல்ல உதவும் பிரதான ராஜகோபுரம் அந்நாளைய தேவைக்கேற்ப மிகவும் குறுகலாக கட்டப்பட்டுள்ளது. இந்த குறுகிய பாதை வழியாகத்தான் குடியிருப்புகள் உள்ள 4ம் பிரகாரத்திற்கு சென்று அதன் பின் கோயிலுக்குள் செல்ல வேண்டும். இந்த பிரதான வழியில் அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள்கூட செல்ல முடிவதில்லை.

விழா காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் தெற்கு மற்றும் வடக்கு வாசல்களில் செல்லுமாறு திருப்பிவிடுகின்றனர். அநத வழிகள் வாகன போக்குவரத்திற்கு ஏற்ற அகலமான ரோடுகள் அல்ல. அதிக குடியிருப்புகள் கொண்ட குறுகலான வீதிகளாகும். இவற்றின் வழியே செல்ல வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இது தவிர கோயிலை சுற்றிலும் எந்த வாகனமும் நிறுத்த முறையான பார்க்கிங் வசதி இல்லை. இந்த காரணங்களால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், வாகனங்களில் வருவோர் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

இதற்கு தீர்வாக கோயிலின் 5ம் பிரகாரமான மேலவிபூதி பிரகாரத்தில் வீரபத்திரசுவாமி கோயிலுக்கு எதிரே, சற்றே தெற்கில் மதில் சுவரில் ஒரு பாதை அமைத்தால் அங்கிருந்து அகலமான 4ம் பிரகாரத்திற்குள் அனைத்து வாகனங்களும்  சுலபமாக சென்று வரமுடியும். இந்த 4ம் பிரகாரத்தின் நான்கு வீதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்களை யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி நிறுத்த  முடியும்.  மேலும் கோயிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் கோயிலின் 4ம் பிரகாரத்திற்குள் எளிதில் சென்று திரும்பும் வகையில் அகலமான ஒரு பாதை  அமைத்து தர வேண்டும்  இந்த பாதை அமைப்பதற்கு இருபுறமும் இடமும், வசதியும் உள்ளன. இந்த புதிய பாதை அமைந்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், திருவானைக்காவல் மக்களும் நிம்மதியடைவார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruvanaikaval ,Srirangam , Simple way , Tiruvanaikaval temple, Srirangam?
× RELATED திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி...