வி.கே.புரம்: பாபநாசத்தில் புனித நீராடிய நடிகர் விவேக், தாமிரபரணி நதியை பாதுகாக்க ஆண்டுதோறும் இதேபோல் விழாக்கள் நடத்த வேண்டுமென கூறினார். பாபநாசம் ஆனந்தவிலாஸ் அருகே உள்ள தாமிரபரணி நதியில், நேற்று மாலை நடிகர் விவேக் புனித நீராடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் தாமிரபரணி நதியிலே குளித்து வளர்ந்தவன். தொன்மையான நதிகளில் தாமிரபரணியும் ஒன்று. தமிழகத்தில் பிறந்து தமிழகத்திலேயே முடிவடையும் நதி தாமிரபரணி. லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வு அளித்து வருகிறது.
இந்த விழாவில் நாம் குளிப்பதுடன் நிறுத்தி விடக்கூடாது. இந்த தாய் நதியை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் தூய்மையை பாதுகாக்க வேண்டும். இதில் குப்பைகளை கொட்டவோ, கழிவுநீரை விடவோ கூடாது. தாயைப்போல் நாம் பாதுகாக்க வேண்டும். தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் நதி. இது திருநெல்வேலிக்கு மட்டும் சொந்தமல்ல தமிழ் இனத்திற்கே சொந்தமானது. இது எப்பொழுதும் ஜீவநதியாக இருக்க, தாமிரபரணியை பாதுகாக்க ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற விழாக்கள் நடத்த வேண்டும், என்றார். பேட்டியின்போது நடிகர் முருகன், நண்பர் நாகஜோதி, விஏஓக்கள் ராஜா செந்தில்குமார், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி