தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகசதீன் நேற்று 5வது கட்ட விசாரணையை தொடங்கினார். போலீஸ் தடியடியில் காயமடைந்து இறந்த டிரைவர் ஜஸ்டின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விவரங்களை கேட்டறிந்தார். தூத்துக்குடியில் கடந்த மே 22, 23ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். இதுதொடர்பாக விசாரிக்க தமிழக அரசால் ஒரு நபர் விசாரணை கமிஷன் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜூன் 4ம் தேதி தூத்துக்குடியில் விசாரணையை துவக்கினார். ஏற்கனவே 4 கட்ட விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் 5வது கட்ட விசாரணைக்காக நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடிக்கு வந்தார்.
போலீஸ் தடியடியில் காயம் அடைந்து, கிட்னி பாதிப்பால் கடந்த 16ம் தேதி இறந்த ஓட்டப்பிடாரம் அருகே கீழ முடிமண்ணைச் சேர்ந்த டிரைவர் ஜஸ்டின் (27) வீட்டுக்கு நேற்று சென்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். அவர் சிகிச்சை பெற்று வந்ததற்கான ஆதரங்களையும் பெற்றுக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 48 பேருக்கு ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கலவரத்தில் காயம் அடைந்தவர்களில் 5 பேர் நேற்று விசாரணைக்கு ஆஜராயினர். தொடர்ந்து வரும் 25ம் தேதி வரை நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்த உள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி