சென்னை: வளி மண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து, வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக தற்போது வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சிதம்பரம், வானூர் பகுதியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. அணைக்கரை சத்திரம் 80 மிமீ மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை சத்தியமங்கலம், பாபநாசம்,மரக்காணம் 70 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக இரவு மற்றும் நள்ளிரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்நிலையில், 26ம் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி