கொடைக்கானல்: இஸ்ரேல் நாட்டவர்கள் விரைவில் வர உள்ளதால் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என, அதிரடிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2017, ஆக.11ம் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மஞ்சித் மெஹபூப், சாலிக் முகமது, ரஷீத்அலி, சக்குவான், ஜசீம், ராம் சத், சஜிர் மங்கல சேரி, மொயின் ஆகிய 8 பேர் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கி, இங்குள்ள இஸ்ரேல் நாட்டவர்களை கொல்ல திட்டமிட்டது தெரிந்தது. இதைத்தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் நிரந்தர போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. வட்டக்கானல் பகுதிக்கு வரும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூத மதத்தினர் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை தங்கியிருந்து சிறப்பு வழிபாடு நடத்துவர். இதனை நடத்த இவர்களின் மதத்தலைவரான காபாத் வந்து செல்வார்.
நவம்பர் மாதத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் நக்சல் நடமாட்டம் ஏதும் உள்ளதா என மாவட்ட எஸ்பி சக்திவேல் தலைமையில் அதிரடிப்படையினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி சோதனை மேற்கொண்டனர். வட்டக்கானல், பாம்பார்புரம், டால்பின்நோஸ், வெள்ளக்கெவி, தேனி மாவட்டம், கும்பக்கரை வழியாக பெரியகுளம் வரை சோதனை நடத்தினர். ஆனால் போலீஸ் வட்டாரத்தில் மலையேற்றத்திற்கு சென்றதாகவும், மற்றபடி ஒன்றுமில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. எந்த முன்னறிவிப்புமின்றி அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கொடைக்கானல் மலைப்பகுதியில் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி