×

அதிமுகவை மீட்பேன் என்று கூறும் டி.டி.வி.தினகரன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் நிற்பாரா?: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை: அதிமுகவை மீட்பேன் என்று கூறும் டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து வெற்றிபெற்ற பிறகு தொகுதி பக்கம் திரும்பி பார்க்கவில்லை. முதலில் அவர் ஆர்.கே.நகர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு அதை மீட்டு எடுக்க தயாரா? அதன்பிறகு அதிமுகவை மீட்டெடுப்பது பற்றி பேசட்டும். அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்துள்ள ஜெயலலிதா சிலை, வேறு யார் மாதிரியோ உள்ளது அதனால் சிலையை மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் இன்னும் மாற்றவில்லையே என்று கேட்கிறீர்கள். ஜெயலலிதா முழு உருவ சிலை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த சிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

 நிச்சயமாக அந்த பணி நடைபெறும்.  இலங்கையில் சிறை பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேருக்கு ₹60 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத மிகப்பெரிய தண்டனை. வாழ்வாதாரத்துக்காக, வழிதவறி சென்ற மீனவர்களை பிடித்து சிறையில் அடைத்து 60 லட்சம் அபராதம் விதித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.  முதல்வர் பிரதமரை சந்தித்தபோது பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசியுள்ளார். பிரதமரும் எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி இருக்கிறார். இது முன்னேற்றமான விஷயம். தமிழக அரசு விலை குறைப்பது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DD V Dissanayake ,MLA ,Minister Jayakumar , Will DD V Dissanayake, MLA's post,resign, Minister Jayakumar
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...