சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உட்பட 6 பேரின் நீதிமன்ற காவலை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைச்சர், அரசு அதிகாரிகள் பலர் பல கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கை விரிவாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் தமிழக அமைச்சர், டிஜிபி, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர், போலீசார் அதிகாரிகளின் வீட்டில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அதில், பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.
இதனைதொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் குட்கா உற்பத்தியாளர் மாதவராவ், பங்குத்தாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ், மற்றும் விற்பனை செய்ய அரசு தரப்பில் ஆதரவாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவகுமார் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், இவர்களின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததால், போலீசார் 6 பேரையும் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, மாதவராவ் உட்பட 6 பேரையும் வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி