மன்னார்குடி: கரூரிலிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகில் உள்ள செம்போடை பகுதிக்கு 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி கொண்டு ஒரு டேங்கர் லாரி நேற்று மன்னார்குடி வழியாக சென்றது. லாரியை காளிதாஸ்(38) என்பவர் ஓட்டி வந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள முதல்சேத்தி கிராமம் அருகே சென்ற போது லாரிக்கு முன்னால் சென்ற டிராக்டர் திடீரென பிரேக் அடித்ததால் பெட்ரோல் ேடங்கர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதி அதில் சாய்ந்தபடி நின்றது.
லாரி மோதிய வேகத்தில் டிரான்ஸ்பார்மரில் சென்ற மின் கம்பி ஒன்று அறுந்து அருகிலிருந்த பனைமரத்தின் மீது விழுந்ததில் பனைமரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த மன்னார்குடி உதவி மின் பொறியாளர் கண்ணன் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மின் விநியோகத்தை நிறுத்தினர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பனை மரத்தில் எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
மின்வாரிய ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக மின் விநியோகத்தை நிறுத்தி தீயை அணைத்ததால் 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி வந்த லாரி மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது. விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவர் காளிதாசை தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி