சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி பினு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பினு (50) என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன், மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில், தனது கூட்டாளிகள் மற்றும் ரவுடிகள் புடைசூழ, வீச்சரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் வெளியானதும் ரவுடி பினு தப்பி தலைமறைவானான்.அதன் பிறகு என்கவுன்டருக்கு பயந்து அவனே ேபாலீசில் சரணடைந்தான். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி பினு, அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்ற உத்தரவின் பேரில், அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட தானிப்பூண்டி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ரவுடி பினு கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்துக்கு சென்று, ரவுடி பினு மற்றும் கூட்டாளிகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளி வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (எ) ஜெயபிரகாஷ் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதனிடையே, மாதர்பாக்கத்தை சேர்ந்த ரத்தினம் (66) என்பவர், நேற்று முன்தினம் பூவலம்பேடு வழியாக பைக்கில் வந்தபோது, பினு மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர், இவரை வழிமறித்து, தங்களை ஏற்றி செல்லும்படி அரிவாளை கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனர். அவர் மறுத்ததால் சரமாரியாக அடித்து துரத்தியுள்ளனர். இதுகுறித்து ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளி பிரகாஷ் மீது வழக்கு பதிந்தனர்.பின்னர், கைதான இருவரையும் நேற்று பொன்னேரி நீதிமன்ற குடியிருப்பில் உள்ள நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் சிறையில் அடைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி