×

கால்பந்து போட்டியில் இந்தியா-சீனா ஆட்டம் டிரா

சுஷோ: இந்தியா-சீனா அணிகள் இடையேயான கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்தாண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில், இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில், சீன அணியுடன் நட்பு ரீதியில் விளையாடும் போட்டி ஷாங்காய் அடுத்த சுஷோ நகரில் நேற்று நடந்தது.  இரு அணிகளும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நேருக்குநேர் நேற்று மோதின. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இரு அணிகளும் மோதுவதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், ஆட்டம் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக இருந்தது. இரு அணி வீரர்களும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

சீன அணியின் வீரர்கள் பலமுறை கோல் அடிக்க முயன்றனர். இதை இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் முறியடித்தார். ஆக்ரோஷமாக விளையாடிய சீன வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதேபோல், இந்திய வீரர் பிரிதம் அடித்த பந்தை சீனா கோல்கீப்பர் தடுத்ததால் கோல் அடிக்க முடியவில்லை. இரு அணிகளும் சமபலத்தில் இருந்ததால் யாரும் கோல் அடிக்காமல் ஆட்டம் டிராவில் முடிந்தது. பலம் வாய்ந்த அணியான சீனாவுடன் சிறப்பாக விளையாடியது இந்திய அணியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-சீனா கால்பந்து அணிகளிடையே இதுவரை 17 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், சீன அணி 12 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள நிலையில், 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. பிபா சர்வதேச தரவரிசையில் சீன அணி 76வது இடத்திலும், ஆசிய அளவில் 6வது இடத்திலும் உள்ளது. இந்திய அணி சர்வதேச அளவில் 97வது இடத்திலும், ஆசிய அளவில் 15வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,match draw ,China , Football match, India, China, draw draw
× RELATED சொல்லிட்டாங்க…