ஸ்ரீவைகுண்டம்: இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நவ திருப்பதிகளுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நீராட குவிந்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ முறப்பநாடு காசி தீர்த்தக்கட்டத்தில் புனித நீராடினார். தாமிரபரணி மகாபுஷ்கர விழாவின் 3வது நாளான இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 144 தீர்த்தக் கட்டங்களில் தாமிரபரணியை வழிபட்டு பக்தர்கள் புனித நீராடினர்.
மகாபுஷ்கர விழாவின் 3வது நாளான இன்று வைகுண்டம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள பிரம்ம தீர்த்த படித்துறை அருகே யாகசாலை அமைக்கப்பட்டு காலை 8.30 மணி அளவில் துர்கா சொரூப பூஜை, சுயம்வர பூஜை, கலாபார்வதி ஹோமம் நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது.
இதைத் தொடர்ந்து சங்கல்ப நீராடலும், கோ பூஜை, பாராயணம், விஷ்ணு சகஸ்கரநாமம், லலிதா சகஸ்கர நாமஅர்ச்சனையும், நவக்கிரக ஹோமம், வேதி மகாத்மிய பூஜைகளும் நடக்கின்றன. மாலையில் மகா ஆரத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. மகாபுஷ்கர விழாவையொட்டி வைகுண்டம் குமரகுருபர் கல்லூரி காந்திய சிந்தனை பண்பாட்டு மைய தலைவர் பேராசிரியர் போஸ் தலைமையில் கல்லூரி மாணவர்கள் புஷ்கரத்திற்கு குவிந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முறப்பநாட்டில் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட யாகசாலையில் தாமிரபரணி மகாபுஷ்கரம் 3வது நாளையொட்டி கணபதி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடந்தன. மாலை 5 மணிக்கு ஆரத்தி நடக்கிறது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுகவினர் முறப்பநாடு காசி தீர்த்தக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டனர். இதுபோல் ஆழிகுடி மாரடைச்சான் சுடலை கோயிலில் மகாபுஷ்கரம் 3வது நாளையொட்டி யாகம் நடந்தது.
இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நவதிருப்பதிகளுக்கு வந்த பக்தர்கள், தாமிரபரணி மகாபுஷ்கரத்தையொட்டி வைகுண்டம் தாமிரபரணி பிரம்ம தீர்த்த படித்துறை, முறப்பநாடு காசி தீர்த்தக் கட்டத்தில் புனித நீராடினர். இதனால் நேற்று ைவகுண்டம், முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஏரல் சேர்மன் கோயில் ஞானதீர்த்த படித்துறையில் இன்று 2வது நாளாக வழிபாடு நடந்தது. புஷ்கர கமிட்டி சார்பில் நதிக்கரையில் கோ பூஜை நடத்தப்பட்டு ஆற்றில் மலர் தூவி தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் கமிட்டி தலைவர் கருத்தப்பாண்டிய நாடார், பாஜ நகர தலைவர் பரமசிவம், நகர இளைஞரணி தலைவர் அர்ஜூன் பாலாஜி உள்பட ஏராளமானபேர் பங்கேற்று புனித நீராடினர். இதுபோல் சிவகாசி, சாத்தூர் பகுதியில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தாமிரபரணி புஷ்கர விழாையொட்டி ஏரல் சேர்மன் கோயிலில் ஏராளமான தற்காலிக கடைகள் வந்துள்ளன. இதுபோல் சிறுத்தொண்டநல்லூர் மக்கள் சார்பில் ஏரல் சுந்தரவிநாயகர் கோயில் படித்துறையில் 2வது நாளான இன்று கோ பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ரவிசங்கர், ராமகிருஷ்ணன், ஜெய்சங்கர்ராஜ் உள்ளிட்ட பலர் நீராடினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி