புதுடெல்லி: மக்களவை தேர்தலுடன், தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலும், தமிழக சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் தமிழக அரசின் பதவிக்காலம் 2021 வரை உள்ளது. மேலும் தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு கண்டிப்பாக யாருடைய நிர்பந்தமும் காரணமில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இதைத்தவிர தமிழகத்தின் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடிந்தால்தான் அந்த தொகுதியானது காலியாக உள்ளது என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்க முடியும்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 23ம் தேதி நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் கண்டிப்பாக நடத்தி முடிக்கப்படும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த மனு நிலுவையில் உள்ளதால் அது குறித்து எந்த கருத்தையும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி