சென்னை: சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்புரைநோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நேரடியாக இணையதளம் மூலமாக சென்னையில் இருந்து மாஸ்கோவிற்கு ஒளிபரப்பும் நிகழ்ச்சியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200வது ஆண்டையொட்டி இந்திய ரஷ்யா அறிவுத்திறன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கண்புரைநோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையை நேரடியாக இணையதளம் மூலமாக சென்னையில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு ஒளிபரப்பப்படுவதை சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் மருத்துவமனையாக உள்ளது. 1985 முதல் இதுவரை 2.60 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பதினொன்றாவது அனைத்து ரஷ்ய கண் மருத்துவர்கள் மன்றம், மாஸ்கோ ஹெல்ம்ஹால்ஸ் கண் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு கண் மருத்துவமனையிலும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுதுளை கண்புரை அறுவை சிகிச்சை மூலம் எல்லாத் தூரத்திற்கும் ஏற்ற பொருத்தப்படுகிறது. நுண்ணோக்கிக் கருவி, உள் விழி கண்ணாடி வில்லை போன்ற கருவிகள் நமது இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்றன. மேலும் இந்த அறுவைச் சிகிச்சையினை www.appasamy.com என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி