×

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியில் கடல் ஆழப்படுத்தும் பணி விரைவில் முடியுமா?: மீனவர்கள் எதிர்பார்ப்பு

சேதுபாவாசத்திரம்:  தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தில் பல ஆண்டுகளாக  இடவசதியின்றி சிறிய அளவிலான மீன்பிடி துறைமுகம் செயல்பட்டு வந்தது. இந்த மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்து நவீனப்படுத்த வேண்டுமென இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பழைய மீன்பிடி துறைமுகம் மற்றும் துறைமுக பகுதியில் இருந்த கட்டிடங்களை இடித்து அப்புறபடுத்திவிட்டு ரூ.66 கோடியில் புதிய துறைமுகம் கட்டுமான பணிகள்,விரிவாக்க பணிகள் நடந்த வருகிறது. மல்லிப்பட்டினத்தில் 2 மீன்பிடி துறைமுகம், படகு இறங்குதளம், மீனவர்கள் வலை காயவைக்கும் இடம், ஓய்வறை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

மேலும் புதிய துறைமுகம் கடல் உள்ளே அமைந்துள்ளதால் படகுகளை நிறுத்தி வைக்கும் இடம் மண் மேடிட்டு தூர்ந்துபோய் ஆழம் குறைவாக உள்ளது. எனவே படகுகள் நிறுத்த வசதியாக துறைமுக பகுதியை ஆழப்படுத்தி தர வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று தற்போது விசைப்படகுகளை நிறுத்தி வைக்க ஏதுவாக மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் கடலை ஆழப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக வரவழைக்கப்பட்ட நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட சிறியரக கப்பல் மூலம் கடலில் உள்ள மண் தோண்டியெடுக்கப்பட்டு குழாய் மூலம் உறிஞ்சப்பட்டு கரையோரம் கொட்டப்படுகிறது. இதற்கு இப்பகுதி மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு துறைமுக பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sea ,Mallipattinam , Mallipattinam, fishing harbor, fishermen
× RELATED இந்தியா நோக்கி வந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்