×

ஏர்வாடி காவல்நிலையத்தில் ‘சினிமா பாணி பஞ்சாயத்து’ ஏற்கனவே திருமணமான இளம்பெண்ணை கள்ளக்காதலனுடன் சேர்த்த போலீஸ்

* அடுத்தவன் பொண்டாட்டிய யாரும் கூட்டிப்போகலாமா?
* எஸ்ஐயுடன் உறவினர்கள் கடும் வாக்குவாதம்
கீழக்கரை: திருமணமான இளம்பெண்ணை, கள்ளக்காதலனுடன் போலீசாரே சேர்த்து வைத்தனர். பெண்ைண தங்களுடன் அனுப்புமாறு உறவினர்கள் எவ்வளவோ மன்றாடியும் எஸ்ஐ பிடிவாதமாக, கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்த சம்பவம் ஏர்வாடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே மங்களேஸ்வரி நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவரது கணவர் சமீபத்தில் வேலைக்காக துபாய் சென்றார். கடந்த 6ம் தேதி அந்த பெண்ணை காணவில்லை என, ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.  ஏர்வாடி போலீசார் மாயமான பெண்ணை தேடினர். அந்த பெண் சின்ன ஏர்வாடி பகுதியில் கள்ளக்காதலனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து பெண்ணின் வீட்டாருக்கு தகவல் தந்தனர். அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பெண்ணை தங்களுடன் அனுப்புமாறு கேட்டபோது, எஸ்ஐ சரவணன் உள்ளிட்ட போலீசார் அனுப்ப மறுத்து வாக்குவாதம் செய்தனர். காவல்நிலையத்தில் நடந்த இந்த ‘சினிமா பாணி கள்ளக்காதல் பஞ்சாயத்து’ வீடியோ வாட்ஸ்அப் மற்றும்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அதன் விபரம்:எஸ்ஐ பெண்ணின் தாயிடம், ‘‘சொல்லுங்கம்மா.. என்ன செய்ய.... உங்க பொண்ணை கண்டுபிடிச்சு கொடுத்திட்டேன். ஏதாவது பேசுறீங்களா...’’ என்கிறார்.

பெண்ணின் தாய்: நாங்க பேசி என்ன ஆகப்போதுய்யா...
உறவினர்: அந்த அம்மா என்னத்தய்யா பேசும்.. நாங்க சொந்தக்காரங்கதானே.. நாங்க வேணும்னா அந்த புள்ளக்கிட்டே பேசட்டுமா?

எஸ்ஐ: அந்த பொண்ணுக்கு 21 வயது. மேஜர்.. சட்டப்படி அது யார்கிட்டே பேச விருப்பப்படுதோ அவங்க கிட்டேதான் பேச முடியும்... நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க... நான் கண்டுபிடிச்சேன்.. நான் சொல்றதைத்தான் நீங்க கேக்கணும்...
உறவினர்: அய்யா... வீட்ல இருக்கிற புள்ளைனா பரவாயில்லைய்யா... கட்டிக்கொடுத்த புள்ளை... அந்த பொண்ணு இன்னொருத்தன் பொண்டாட்டிய்யா... நாங்க பேசுறோம்யா புள்ளக்கிட்ட.

எஸ்ஐ: எல்லோரும் வெளியே போங்க... யாருமே பேசக்கூடாது இங்கே.
உறவினர்: என்ன சட்டம்யா இது? புருஷன் துபாய்ல இருக்கான்.. அடுத்தவன் பொண்டாட்டியை யார் வேணும்னாலும் கூட்டிகிட்டுப் போகலாமா? கல்யாணமான பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடறது தப்பில்லையா..?

எஸ்ஐ: அதெல்லாம் தெரியாது.. எல்லோரும் போங்க...
உறவினர்: அய்யா... மிரட்டுற மாதிரி பேசாதீங்க... நாங்க சொல்றதுதான் வேதம்னு பேசுறீங்க... போலீஸ்காரங்க சமரசம் பேசி வையுங்க... அந்த பொண்ணை ஏமாத்தி, ஏதேதோ பேசி தூக்கிட்டு போய்ட்டான்யா...
அப்போது ஆவேசமடைந்த எஸ்ஐ,

‘‘மரியாதை கெட்டுடும்... அடிச்சுப்புடுவேன்... ஆமா... போறீங்களா இல்லையா...’’ என்கிறார்.
உறவினர்: எங்கே சரியான ஆம்பளையா இருந்தா அடிங்க பார்ப்போம்...
எஸ்ஐ: இந்தா பாருங்க... அந்த பொண்ணு யாரு கூட பேச விருப்பப்படுதோ பேசட்டும்... சட்டம் இதைத்தான் சொல்லுது...

உறவினர்: ஓஹோ.. அப்படியா? யாராவது ரெண்டு பயலுக வருவாங்க... அந்த பொண்ணை புடிக்குதுன்னு சொல்வாங்க.. நாங்க உடனே அனுப்பிட முடியுமா... சரி.. உங்க சட்டம் என்ன சொல்லுதோ அதையே செய்ங்க...
எஸ்ஐ: இங்க பாருங்க... உங்க கம்ப்ைளண்ட் படி கண்டுபிடிச்சு கொடுத்துட்டோம்.. இனி பொண்ணோட விருப்பம்தான்...
இதனைத்தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் கலைந்து செல்கின்றனர்.

சம்பந்தப்பட்ட இளம்பெண்ணும், கள்ளக்காதலனுடன்தான் செல்வேன். தாய் வீட்டுக்கு சென்றால் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என போலீசாரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கள்ளக்காதலனுடன் அப்பெண்ணை போலீசார் அனுப்பி வைக்கின்றனர். காவல்நிலையத்தில் நடந்த இந்த கள்ளக்காதல் விவகாரம் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவுகிறது.இதுகுறித்து எஸ்ஐ சரவணன் கூறுகையில், ‘‘அந்த பெண் 21 வயதை தாண்டியவர். மேலும் விரும்பியவரோடுதான்  செல்வேன் என்றும், தாய் வீட்டுக்கு சென்றால் உயிருக்கு பாதுகாப்பு  இல்லை என்கிறார். இதனால் வேறு வழியின்றி அவர் விரும்பியவரோடு அனுப்பி  வைக்க நேரிட்டது,’’ என்றார். இச்சம்பவம் ஏர்வாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : police station ,Airwadi , 'Cinematic style panchayat' ,Airwadi,police station Already,married young girl, joined , thugs
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து