வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இதயத்தை தாக்கி உயிரை பறிக்கும், ‘ருமாட்டிக்’ நோயுடன் வந்த சிறுமியை உயிர் பிழைக்க வைத்து அரசு டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.வேலூர் மாவட்டம், நெமிலி தாலுகா, பாளையமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளி(27). இவர்களது மகள் யோகா(11), பாணாவரம் அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 1ம் தேதி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி யோகா, ‘ருமாட்டிக்’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நோய் முற்றிய நிலையில் இதய வால்வுகளில் வீக்கமும், சுருக்கமும் மாறி, மாறி ஏற்பட்டு ரத்தக்கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையிலும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவு நிபுணரான டாக்டர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். எந்த மருந்தையும் உடல் ஏற்றுக் கொள்ளாத நிலையில் சென்னையில் இருந்து உயர்தர சிறப்பு மருந்து தருவிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர் கண்காணிப்புடன் ஒருவார சிகிச்சையில் சிறுமி பூரணமாக குணமடைந்தாள். உயிருக்கு உத்தரவாதமில்லை என்று கைவிடப்பட்ட தங்கள் மகளை காப்பாற்றிய அரசு டாக்டர்களுக்கு சிறுமி யோகாவின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக வந்த தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குனர் டாக்டர் தரேஷ்அகமது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் சாந்திமலர் ஆகியோர் சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினரை பாராட்டினர். தனியார் மருத்துவமனையில் இத்தகைய சிகிச்சைக்கு ₹1.5 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி