சென்னை: ஆண்டிற்கு 11 மாதங்கள் புரட்டாசியாகவே இருந்தால் வனத்தில் உள்ள அனைத்து விலங்குகளும் ஆபத்தில்லாமல் பாதுகாப்புடன் இருக்கும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையை அடுத்த நன்மங்கலத்தில் நடைபெற்ற வனஉயிரின வார விழாவில் பங்கேற்ற அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆண்டிற்கு 11 மாதங்கள் புரட்டாசி மாதங்களாகவே இருந்து விட்டால் வனத்தில் உள்ள விலங்குகள் ஆபத்தில்லாமல் இருக்கும் என்றார்.
பொதுவாக பெருமளவில் வனவிலங்குகளை மக்கள் அடித்து உண்பதை போல் அமைச்சர் கூறிய கருத்து பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம் போல இந்த கூட்டத்திலும் பழமொழியை மாற்றி கூறினார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனனை பாராட்டி பேசிய சீனிவாசன் மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது என்பதற்கு பதிலாக கீர்த்தி சிறியது, மூர்த்தி பெரியது என கூறி சிரிப்பலையை வரவழைத்தார்.
ஏற்கனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது பேச்சால் பல்வேறு சலசலப்புகளில் சிக்கியவர் ஆவார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதற்கு பதிலாக யானை எழுந்தாலும் ஆயிரம் பொன், படுத்தாலும் ஆயிரம் பொன் எனக்கூறி பார்வையாளர்களை மிரள வைத்தார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங் என்பதற்கு பதிலாக நரசிம்ம ராவ் என்று கூறி அதிர்ச்சி அடைய வைத்தவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி