புனே: இந்தியாவின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தையான கனுப்பிரியா அகர்வால் ஆகா துர்காவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. முதல் தடவையாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்திருப்பது குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் தனது பிறந்தநாளை புனேயில் கொண்டாடினார். கனுப்பிரியா கடந்த 1978 அக்டோபர் 3ம் தேதி பிறந்தார். புனேயில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்று ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்காக கனுப்பிரியா புனே வந்தார். முதல் முறை தனது பிறந்தநாளை மகாராஷ்டிராவில் கொண்டாடவிருப்பதாக கனுப்பிரியா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தான் சோதனைக்குழாய் குழந்தையாக இருந்தாலும் மற்ற குழந்தைகளைப் போலவே வளர்ந்ததாக அவர் கூறினார். “என் தாத்தா, பாட்டி ஆகியோர் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். அவர்கள்தான் முதலில் என்னை ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று” என்று கனுப்பிரியா கூறினார். கனுப்பிரியாவுக்கு இப்போது 5 வயது மகள் இருக்கிறாள்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி