கும்பகோணம்: ஜிஎஸ்டி வரியால் கும்பகோணத்தில் பித்தளை பாத்திர தயாரிப்பு 70 சதவீதம் சரிந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில பித்தளை பாத்திரம் பொருட்கள் தயாரிக்கும் 180க்கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன. இவற்றில் குடம், தவலை, தட்டு, படி, மரக்கா, சொம்பு, குவளை, கற்பூர ஆரத்தி தட்டு மற்றும் பல்வேறு பாத்திரங்கள் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், சுவாமிமலை, மாங்குடி, வலையப்பேட்டை, நாச்சியார்கோயில், திருநாகேஸ்வரம் பகுதிகளில் பல குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக பித்தளை பாத்திரங்களை குடிசை தொழிலாக உற்பத்தி செய்து வருகின்றனர். கும்பகோணம் பித்தளை பாத்திரத்திற்கு வெளிமாநிலங்களுக்கு என்று தனிமவுசு உள்ளது. கும்பகோணத்தில் தயாரிக்கப்படும் பித்தளை பாத்திரங்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனைக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் பித்தளைக்கு 5 சதவீதமாக வாட் வரி இருந்தது. கடந்தாண்டு ஜூலை மாதம் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு விதித்தது. இந்த வரி உயர்வால் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பித்தளை பொருட்களில் உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியது. 12 சதவீத ஜிஎஸ்டி வரியால் பித்தளை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி உயர்வால் இந்தாண்டு 70 சதவீத உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
