×

மக்கள் வரிப்பணத்தை சுரண்டும் எடப்பாடி: மாதவரம் சுதர்சனம் பேச்சு

திருவொற்றியூர்: மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று மணலி சடையங்குப்பம், பர்மா நகர், மணலி புதுநகர், காமராஜர் நகர், கன்னியம்மன் பேட்டை, கடப்பாக்கம், 17வது மற்றும் 19வது வார்டுகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பகுதி மக்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அப்போது, மாதவரம் சுதர்சனம் பேசுகையில், “ஏழை, எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து கலைஞர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். தற்போதைய அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பயன்படக்கூடிய எந்த திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. அதற்கு பதிலாக, மக்களின் வரி பணத்தை சுரண்டும் கும்பலாகவே எடப்பாடியும், அவரது அமைச்சர்களும் உள்ளனர். அவர்களின் நிர்வாக சீர்கேட்டால் வேலையின்மை, விலைவாசி உயர்வு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் துயரங்களுக்கு தீர்வு ஏற்படும். எனவே, அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,” என்றார். மாவட்ட துணை செயலாளர் அறிவழகி பாலகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் பரந்தாமன், துக்காராம், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் காசிநாதன், வட்ட செயலாளர்கள் கண்ணப்பன், தாமரைச்செல்வம், ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன், நிர்மல்குமார், பாபு, உதயா, ராஜேந்திரன், கவிதா நாராயணன், குகன், ராஜகோபால், சிவசங்கரன், சந்திரன், கார்த்திக் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்….

The post மக்கள் வரிப்பணத்தை சுரண்டும் எடப்பாடி: மாதவரம் சுதர்சனம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Madavaram Assembly Constituency ,Djagam ,Madavaram S. Freedom ,
× RELATED கலைஞர்100-ஐ முன்னிட்டு, திமுக பொறியாளர்...