விஜயவாடா: திருமணத்தில் கலந்து கொள்வோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆந்திரா மணமகன் வேண்டுகோள் விடுத்ததால், இருதரப்பு குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், மறுபுறம் தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சாட்டேனபள்ளியைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர், விஜயவாடாவைச் சேர்ந்த பவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் வரும் ஜூன் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருமணத்தில் கலந்து கொள்வோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கோகுல் அறிவுறுத்தினார். அதையடுத்து விஜயவாடா மருத்துவமனை ஒன்றில் கோகுல் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கும், பவ்யா குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அந்த இளைஞரை கவுரவித்து பாராட்டியது….
The post தடுப்பூசி போட்டால்தான் கல்யாணம்: மாப்பிள்ளை திடீர் வேண்டுகோள் appeared first on Dinakaran.