ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள தலைக்குந்தா முத்தநாடு மந்து பகுதியில் தோடர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகையான ‘மொற்பர்த்’ வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் பனியர் உட்பட 6 வகையான ஆதிவாசி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரியம், உடை, இருப்பிடம், பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். இந்நிலையில், தோடர் இனமக்கள் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ‘மொற்பர்த்’ எனப்படும் தங்களின் பாரம்பரிய புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். தோடர் இன மக்களின் தலைமை மந்தாக உள்ள முத்தநாடு மந்து பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் இன மக்கள் அனைவரும் முத்தநாடு மந்து பகுதியில் கூடி இப்பண்டிகையை கொண்டாடுவார்கள். பண்டிகையின் போது தங்களின் பாரம்பரிய கோவிலில் வழிபாடு நடத்துவது வழக்கமாகும். இந்நிலையில், இந்தாண்டுக்கான தோடர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகையான ‘மொற்பர்த்’ நேற்று தோடர் இன மக்களின் தலைமை மந்து என அழைக்ககூடிய ஊட்டி அருகேயுள்ள தலைக்குந்தா முத்தநாடுமந்து பகுதியில் கொண்டாப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் (மந்து) உள்ள தோடர் பழங்குடியின மக்கள் ஒன்று கூடி மொற்பாத் பண்டிகையை கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியின் போது அப்பகுதியில் உள்ள தோடர் இன மக்களின் பாரம்பரிய கோவில்களான மூன்போ மற்றும் ஒரியல்வோ கோயில்களில் வழிபாடு நடத்தினர். அப்போது உலக மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி சிறப்பாக வாழ வேண்டும் என வழிபட்டனர். தோடர் இன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்களின் பாரம்பரிய உடையணிந்து ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். தோடர் சமுதாய ஆண்கள் தங்களது உடல் வலிமையை நிரூபிக்கும் வகையில் சுமார் 75 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை அசத்தினர். தோடர் இன மக்களின் பண்டிகையை ஏராளமான சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்தனர். …
The post தலைக்குந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் தோடர் இன மக்களின் ‘மொற்பர்த்’ பண்டிகை விமரிசை-இளவட்ட கல்லை தூக்கி அசத்தல் appeared first on Dinakaran.