×

சென்னை புறநகரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா ஆயில் விற்பனை செய்த மாணவன் உட்பட 2 பேர் கைது: முக்கிய வியாபாரிக்கு வலை

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுக்க தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பல்லாவரம் வாரச் சந்தை நடைபெறும் இடத்தின் அருகே தாம்பரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆய்வாளர் ஷாலினி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த 2 பேரை, மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள், 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.  இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வந்த பைக்கை சோதனை செய்தபோது, அதில், பாட்டில்களில் 350 மில்லி ஆயில் இருப்பது தெரிந்தது. அதை சோதனை செய்தபோது, அது கஞ்சா ஆயில் என்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சைதாப்பேட்டை சி.ஐ.டி நகரை சேர்ந்த ராகவன் (22), ரித்திக் (22) என்பது தெரியவந்தது. இதில், ரித்திக் பிசிஏ படித்த பட்டதாரி வாலிபர் என்பதும், ராகவன் பல்லாவரத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.பார்ம் 4ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் 2 பேரும் படப்பையை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம் கஞ்சா ஆயிலை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அதனை 10 மில்லி பாட்டில்களில் அடைத்து வைத்து, 3000 ரூபாய்க்கு பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். அவ்வாறு, கஞ்சா ஆயில் விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் வகை, வகையாக ஆடை அணிந்து, ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனால், 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.இவர்களுக்கு கஞ்சா ஆயில் விற்பனை செய்த மொத்த வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கல்லூரி மாணவர்கள் சிறை செல்வது தொடர் கதையாக நடந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுபோன்று, கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை அவர் வெகுவாக பாராட்டினார்….

The post சென்னை புறநகரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா ஆயில் விற்பனை செய்த மாணவன் உட்பட 2 பேர் கைது: முக்கிய வியாபாரிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pallavaram ,Tambaram ,Police Commissioner ,Amalraj ,Chennai.… ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!