×

கேரள குற்றப்பிரிவு போலீசார் நடிகர் திலீப் வீட்டில் திடீர் சோதனை: பல மணிநேரம் நீடித்ததால் பரபரப்பு

திருவனந்தபுரம்: நடிகர் திலீப் மீது போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று கொச்சியில் உள்ள திலீப் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் கேரள குற்றப்பிரிவு போலீசார் பல மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர்  திலீப்பின் நண்பரும், டைரக்டருமான பாலசந்திரகுமார் திலீப்புக்கு எதிராக  கூறிய தகவல்கள் இந்த வழக்கில் திருப்பு முனைகளை ஏற்படுத்தி இருக்கிறது.  அதன்படி நடிகை பலாத்கார வழக்ைக விசாரிக்கும் டிஎஸ்பி பைஜூ பவுலோஸ் உள்ளிட்ட போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக திலீப், அவரது தம்பி அனூப் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 14ம் தேதி வரை திலீப்பை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் கொச்சி ஆலுவாவில் உள்ள திலீப் வீட்டிற்கு நேற்று காலை 11 மணியளவில் கொச்சி குற்றப்பிரிவு எஸ்பி மோகனசந்திரன் தலைமையிலான போலீசார் சென்றனர். அதே சமயம் கொச்சியில் உள்ள திலீப்பின் தம்பி அனூப் வீட்டிற்கும், இன்னொரு படை திலீப் படநிறுவன அலுவலத்திற்கும் சென்றனர். பகல் 12 மணியளவில் சோதனை தொடங்கியது. இதுபோல் அவரது தம்பி அனூப் வீட்டிலும் சோதனை நடந்தது. இரவு நீண்ட நேரம் வரை 3 இடங்களிலும் சோதனை நடந்தது. இதற்கிடையே திலீப் ஒரு கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக டைரக்டர் பாலச்சந்திரகுமார் நீதிமன்றத்தில் கூறியதாக தெரிகிறது. ஆனால் திலீப்புக்கு துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே அந்த துப்பாக்கியை கைப்பற்றுவதற்காக தான் போலீசார் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.டிஎஸ்பியை கொல்ல சதி திட்டம் தீட்டியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. முன்ஜாமீன் வழங்க ஏற்கனவே போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்குள் திலீப்புக்கு எதிராக முக்கிய ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காகவே ஒரே நேரத்தில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கிய குற்றவாளிக்கு ஆபத்து: பலாத்கார  வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையிடம் டிரைவராக பணிபுரிந்த சுனில் குமாரை முதல் குற்றவாளியாக போலீசார் சேர்த்து உள்ளனர். அவர் உள்பட கைதான 7  பேரும் தற்போதும் சிறையில் தான் உள்ளனர். இந்த நிலையில் சிறையில் உள்ள  தன் மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுனில் குமாரின் தாய்  சமீபத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து  போலீசார் சிறைக்கு சென்று சுனில் குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது  அவரும் திலீப்புக்கு எதிராக பல முக்கிய விவரங்களை கூறியதாக தெரிகிறது….

The post கேரள குற்றப்பிரிவு போலீசார் நடிகர் திலீப் வீட்டில் திடீர் சோதனை: பல மணிநேரம் நீடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thileep ,Thiruvananthapuram ,Dilip ,Kochi ,
× RELATED கேரளா வாலிபருக்கு குரங்கம்மை அறிகுறி