சென்னை: எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாததால் தான் அம்மா கிளினிக் என்பது தேவையில்லாத திட்டம் என்பதை அடிப்படையாக வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அம்மா மினி கிளினிக் ஒரு அற்புதமான திட்டம். 1,900 இடங்களில் இது துவக்கப்பட்டது. இந்த திட்டத்தை மட்டுமே பார்க்க வேண்டும். எந்த இடத்தில் கிளினிக் அமைந்துள்ளது என்பதை பார்க்கக்கூடாது. அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அம்மா கிளினிக்கில் ஒரு டேபிள், ஒரு சேர் இதை தவிர வேறு என்ன இருக்கிறது என்று கூறுங்கள். இது அம்மா கிளினிக்கா இல்லை சும்மா கிளினிக்கா என்பதை மக்கள் முடிவு செய்துகொள்ளட்டும். எடப்பாடி பழனிசாமி: ஆளும் கட்சி, எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழு அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்து மக்களிடம் கருத்து கேட்கட்டும். மக்கள் தேவையில்லை என்று சொன்னால் அதை மூடிவிடலாம். எனவே, இதை தொடர்ந்து இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்: அம்மா கிளினிக் பற்றி எதிர்கட்சி தலைவர் பேசும்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, கலைஞர் காப்பீட்டு திட்டத்தை பற்றி பேசினார். பழிவாங்குவதற்காக நாங்கள் அதை செய்யவில்லை. அதை முதலில் எதிர்கட்சி தலைவர் நினைத்துக்கொள்ள வேண்டும். கலைஞர் காப்பீட்டு திட்டம் என்பது நோயாளிகளின் மருத்துவ சேவைக்கு பயணளிக்கக் கூடிய வகையில் அமைந்தது. ஆனால், இந்த திட்டத்தை பொருத்தவரை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல், மருத்துவர் இல்லாமல் நடைபெறுகிறது. இன்றைக்கு உள்ள நிதி ஆதாரத்தை பொறுத்து அம்மா கிளினிக் தேவையில்லை. ஊராட்சி பகுதிகளில் அரசு மருத்துவமனை உள்ளது. எனவே, அம்மா கிளினிக் என்பது தேவையில்லாத திட்டம் என்பதை அடிப்படையாக வைத்து தான் செய்துள்ளோம். இதில் எந்தவித பழிவாங்கும் நோக்கமும் இல்லை. இது அரசின் கொள்கை முடிவு….
The post அம்மா மினி கிளினிக்குகளில் அடிப்படை வசதிகள் இல்லை: பேரவையில் முதல்வர் விளக்கம் appeared first on Dinakaran.