பள்ளியில் படிக்கும்போது டீச்சர் ஜோனிடா மீது கிரெஷ். டியூஷன் கிளாசில் பிரீத்தி முகுந்தனுடன் காதல். பிறகு டாக்டர் கயாடு லோஹருடன் காதல். யாரிடமும் காதல் சொன்னதில்லை. கடைசியாக அவர் பழைய காதலான பிரீத்தியை நோக்கி செல்லும்போது, காதலை சொன்னாரா என்பதே கிளைமாக்ஸ். அதர்வா முரளியின் நடிப்பு வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தனது காதலை சொல்ல வந்து தயங்குவது, மறைந்த அவரது தந்தை நடிகர் முரளியின் படங்களை ஞாபகப்படுத்தி ரசிக்க வைக்கிறது.
அவரால் காதலிக்கப்படும் பிரீத்தி முகுந்தனும், கயாடு லோஹரும் இயல்பாக நடித்துள்ளனர். பிரீத்தி முகுந்தனின் இரட்டை வேடம் எதிர்பாராத ட்விஸ்ட். நட்டி நட்ராஜ், தமன், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட் செல்வம், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், ‘பரிதாபங்கள்’ சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிடா, ‘ஆடுகளம்’ நரேன் சிறப்பாக நடித்துள்ளனர். கவுரவ வேடம் ஏற்றுள்ள பஹத் பாசில், சின்னி ஜெயந்த் ஆகியோர், தங்களின் இருப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.
ஒளிப்பதிவில் வர்ணஜாலத்தை நிகழ்த்தியுள்ள மனோஜ் பரமஹம்சா, துள்ளலான இசையில் பாடல்களையும், காட்சிகளின் நகர்வுக்கான அழுத்தமான பின்னணி இசையையும் வழங்கிய தமன் பணி குறிப்பிடத்தக்கது. பிரதீப் ஈ.ராகவ், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், டிராவிட் செல்வம் எழுதிய வசனம் இயல்பாக இருக்கிறது. எதிர்பாராத ட்விஸ்ட்டுகளுடன், கமர்ஷியலான காதல் கதையை இயக்கிய ஆகாஷ் பாஸ்கரன், தொடர்ந்து படம் இயக்கலாம்.
