×

வேண்டாம் கஞ்சத்தனம்!

இஸ்லாமிய வாழ்வியல் கஞ்சத்தனம் என்பது மோசமான பண்பு என்பது நம் அனைவருக்கும் தெரியும். ‘அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தராதவன்,’ ‘எச்சில் கையால்கூட காக்கையை ஓட்டாதவன்’. ‘தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத பாவி’ போன்ற சொற்றொடர்கள் எல்லாம் மனிதனின் கஞ்சத்தனத்தையும், அதன் உள்நோக்கமான சேமிப்புப் பேராசையையும் உணர்த்துவதற்காக உருவானவையே. மனித வாழ்விலிருந்து கஞ்சத்தனத்தை ஒழிக்க இஸ்லாமியத் திருநெறி, சில சட்டங்களையும் வழிமுறைகளையும் வகுத்தளித்து, செல்வத்தின் மீதான மனிதனின் பேராசைக்குக் கடிவாளம் போட்டது. ‘‘உங்களில் பணக்காரர்களுக்கிடையே மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது’’ என்பது திருக்குர் ஆனின் கட்டளையாகும். இதுதான் இஸ்லாமியப் பொருளியலில் அடிப்படைக் கோட்பாடும் ஆகும்.அதாவது, செல்வம் சமூகம் முழுவதிலும் சுற்றிச் சுழல வேண்டும். அவ்வாறு இல்லாது போனால், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும், ஏழை மேலும் ஏழை ஆகிவிடுவதற்கும் வழி பிறந்து விடும். இந்த வழியைத் திருக்குர் ஆன் முழுமையாக அடைத்து விடுகிறது. இந்த ஆணையினால்.வான்மறை குர் ஆன் இந்தக் கொள்கையை ஏட்டளவில் கூறி நின்று விடவில்லை. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அது வட்டியை முற்றாகத் தடை செய்தது. ஜகாத் எனும் தானதர்மங்களைக் கட்டாயக் கடமையாக்கியது. போர்களங்களில் எதிரிகள் விட்டுச் செல்லும் உடைமைகளில் (இதை இஸ்லாமிய மொழி மரபில் ‘கனீமத்’ என்பர்) ஐந்தில் ஒரு பகுதி பொதுப் பணிகளுக்கென ஒதுக்கப்பட்டது.இவற்றைத் தவிர இறைவழியில் செலவு செய்வதன் முக்கியத்துவத்தையும், அழுத்தமாகவும் மனத்தில் பதியும் படியாகவும் அறிவுறுத்துகிறது. பல்வேறு குற்றங்குறைகளை நீக்கப் பிராயச்சித்தமாக, பரிகாரமாக இறைவழியில் செலவு செய்யக்கூடிய பல விதிமுறைகளை நிர்ணயித்தது. எடுத்துக்காட்டாக, கடமையாக்கப்பட்ட ரமலான் நோன்பை உங்களால் நோற்க முடியாமல் போய்விட்டால் எத்தனை நோன்பு விடுபட்டதோ அத்தனை ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம்.    அதேபோல், இஸ்லாம் அற்புதமான வாரிசு உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்தது. இறந்தவர்கள் விட்டுச் செல்லும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களது வாரிசுகளுக்கும், ஒரு பங்கு பரந்த அளவில் பகிர்ந்தளிக்கப்படவும் வழி செய்தது. சொத்துக்குரியவர் உயில் எழுதியிருந்தாலும் சரி, எழுதாவிட்டாலும் சரி, இப்படி மூன்றில், ஒரு பங்கு பகிர்ந்தளிக்கப்படுவது என்பது பொருந்தும்.இவற்றின் காரணமாக செல்வம் சமூகம் முழுவதிலும் சுழன்றுவர ஆரம்பித்தது. கஞ்சத்தனம் வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்று இஸ்லாம் கூறியது. தாராளத் தன்மையையும், மற்றவர்க்கு வழங்குவதையும் உயர்ந்த பண்புகள் எனக் கூறியது. சமூகத்தில் வசதி படைத்தோரின் செல்வத்தில் கேட்பவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் உரிமையுண்டு எனக் குர்ஆன் தெளிவாக்கியது. இப்படிப் பல்வேறு வழிமுறைகளின் மூலம் சமூகத் தளத்திலிருந்து கஞ்சத்தனம் எனும் இழி குணத்தை இஸ்லாம் விரட்டி அடித்தது.– சிராஜூல் ஹஸன்இந்த வார பிரார்த்தனை‘இறைவா, கஞ்சத்தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன். தள்ளாத வயதில் சிரமங்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். உலகத்தின் குழப்பங்களிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக என உன்னிடம் காவல் தேடுகிறேன் (அபூதாவூது)….

The post வேண்டாம் கஞ்சத்தனம்! appeared first on Dinakaran.

Tags : Saliva ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?