×

பிரச்னைகளை நேராக்கும் திருவக்கரை வக்ரகாளி

1 தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள தலம் திருவக்கரை. விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் அமைந்துள்ளது. 2 புதுச்சேரியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விழுப்புரம் – புதுச்சேரிக்கும் இடையில் திருக்கனூர் அருகில் புதுக்குப்பம் என்னும் ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி ஊர்களிலிருந்து எளிதில் செல்லலாம்.3 கம்பீரமான ராஜகோபுரம் அணி செய்ய, அகலமான பிராகாரங்களோடு ஊருக்கு மத்தியில் அமைந்துள்ள அற்புதமான கோயில் இது.4 உள்ளே மூலவர் சந்திரமௌலீஸ்வரர். பிறை சூடிய பெருமான். சந்திரசேகரர் என்ற பெயரோடு காட்சி தருகின்றார். அம்பாளின் பெயர் வடிவாம்பிகை.5 இங்குள்ள லிங்க மூர்த்தி, மும்முகமாக காட்சியளிப்பது சிறப்பு. கிழக்கில் தற்புருடம், வடக்கே வாமதேவம், தெற்கில் அகோர முகமாகவும் காட்சி தரும் அற்புத அமைப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது.6 அகோர முகத்தின் வாயில், இரு ஓரத்திலும் இரு கோரைப் பற்கள் தெரியும். அதுவும், பால் அபிஷேகம் செய்யும்போது நாம் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்.7 வக்கிரம் என்றால் முறை மாறி உள்ளது அல்லது நேர் எதிராக உள்ளது என்பது பொருள். கிரகங்கள் வக்கிரமாகச் சுற்றுகின்றன என்று சொன்னால், பின்நோக்கி சுற்றுகின்றன, எதிர்மறையாகச் சுற்றுகின்றன என்று பொருள். இந்தக் கோயிலில் கொடிமரம், பலிபீடம், சனி, எல்லாமே வக்கிரம்தான். பொதுவாக கோயில் கருவறைக்கு நேர் எதிரில் கொடிமரம் இருக்கும். ஆனால், இங்கே வட புறமாக விலகி வக்ரமாக உள்ளது. கோபுரவாசல் சுவாமிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி வக்கிர நிலையில் இருக்கிறது.8 இங்கே உள்ள வக்ரகாளி அம்மனுக்கு பௌர்ணமி பூஜை, மிக விசேஷமாக நடைபெறுகிறது. அமாவாசையில், பகல் நேரத்திலும் பௌர்ணமியில் இரவு 12 மணிக்கும் வக்ர காளி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.9 இங்கு வக்ரகாளி எனும் நாமத்தோடு அருள்பாலிக்கிறாள். இன்றும் சந்நதியின் அண்மை வெம்மையாய் உக்கிரத்தோடு உள்ளது. வலது காலை மடக்கி, இடது காலை கீழே படரவிட்டு, இடது கைவிரல்களை லாவகமாய் மடித்து ஆள்காட்டி விரல் தன் பாதத்தைச் சுட்டுவதுபோல அமர்ந்த கம்பீரம் அவள் பாதம் பணிய வைக்கிறது. கோபக்கனலின் மத்தியில் பொங்கும் சிரிப்பாய் திகழும் வக்ரகாளியின் பேரழகு வியப்பூட்டுகிறது. காளியன்னை சற்றே தன் தலையை சாய்த்து பார்க்கும் விதம் காண்போரை நெகிழ்த்தும். அதன் மையமாய் அன்னையின் உதட்டில் வழியும் புன்சிரிப்பில் காளியன்னை தன் உக்கிரத்தை மென்மையாய் மறைத்து, கருணையாய் தன்னை வெளிப்படுத்தும் பாங்கை உற்றுப் பார்த்தால் உள்ளம் கதறும். சிலசமயம் ஒரு பேரிளம்பெண் உயிரோடு இளகுவதும், உதடு பிரித்துப் பேசுவது போலும் பார்த்தால் உடல் விதிர் விதிர்த்துப்போடும். குங்குமமும், மஞ்சளும் கலந்த ஒரு சுகந்தம் அந்த சந்நதியில் சுழன்றபடி இருக்கும். அருகே வருவோரை செம்மைப்படுத்தும். அபிஷேகம் முடித்து, அலங்கார கோலத்தில் நாளெல்லாம் அம்பாளைப் பார்க்க கண்களின் நீர் கன்னம் வழிந்தோடும்.10 இந்த சிவாலயத்தில்  வரதராஜப்பெருமாள் சந்நதி உள்ளது. வக்கிராசூரனை வதம் செய்த பிரயோக சக்கரம்,  அவர் கையில் மாற்றி வைத்திருப்பதும் ஒரு வக்கிரம்தான்.11 ஒரு கோயிலின் விசேஷம், அங்கே உள்ள சித்தர்கள் ஜீவசமாதி, பிருந்தாவனம்  முதலிய சிறப்புகள். அந்த அடிப்படையில், குண்டலினி சித்தர் இங்கு ஜீவசமாதி  அடைந்துள்ளார். அவருடைய சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது.12 இங்கே உள்ள சனிபகவான் பிரசித்தி பெற்றவர். பொதுவாக, சனி பகவானுக்கு வலப்புறமாக இருக்கவேண்டிய அவருடைய வாகனமான காகம், இங்கே இடதுபுறத்தில் வக்ரமாக அமைந்துள்ளது. அதனால், இவருக்கு `வக்ரசனி’ என்று பெயர். இந்த வக்கிர சனியை வணங்குபவர்களுக்கு சனியினால் ஏற்படுகின்ற துன்பங்கள் வக்ரமாகி (மாறி) நன்மையாக முடியும். 13 மிகமிகத்  தொன்மையான பழங்கால கோயில், இது கி.மு.756-ல் கட்டப் பட்டதாகச்  சொல்லப்படும் இந்த கோயில் மிகப் பிரதானமான கோயில்.14 அம்பாள் சந்நதிக்கு நேர் எதிரில், ருத்ரபூமி என்று சொல்லப்படும் மயான பூமி உள்ளது.15 திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள், கடன் தொல்லைகளால் தவிப்பவர்கள், மனக்குழப்பம் நிறைந்தவர்கள், ராகு – கேது முதலிய தோஷங்களால் பாதிப்புள்ளவர்கள், பொதுவான கிரக தோஷங்கள் உள்ளவர்கள்  இந்தக் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.16 இங்கே பிராகாரத்தை வலம் வருவதிலும், ஒரு முறை உண்டு. பொதுவாக வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் என்கிறார்கள்.17 காளி கோயிலின் நேர் எதிரில் உள்ள லிங்கத்திற்கு, `கண்ட லிங்கம்’ என்று பெயர்.  இந்த லிங்கத்திலும் ஒரு விசேஷம் உண்டு.  கோடைகாலத்தில் இந்த லிங்கம் மிகக்  குளிர்ச்சியாக இருக்கும். குளிர் காலத்தில் இந்த லிங்கத்திற்கு வேர்த்து, முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும் என்பது விசேஷம்.18 இங்குள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் பாடியிருக்கின்றார். 19 திருமணத்தடை உள்ளவர்கள், பத்ரகாளி சந்நதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி, எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுகிறார்கள். வேண்டுதலை  சீட்டில் எழுதிக் கட்டும் வழக்கம் இந்த தலத்தில் உண்டு. 20 சித்ராபௌர்ணமி, தமிழ் வருட பிறப்பு, பொங்கல், ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, தைப்பூசம், கார்த்திகை தீபம் முதலிய நாள்கள் இங்கு விசேஷம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அஷ்டமி, நவமி நாட்களில், கோயிலில் பக்தர்கள் மிகப்பெரிய அளவில் வருகின்றார்கள்.21 இந்த திருக்கோயில் அருகே கல்குவாரிகள் இருக்கின்றன. திருவக்கரையில் உள்ள தேசிய கல்மரப் பூங்கா இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்படுகிறது. இங்கு இருக்கும் கல்மரங்கள், இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகச்  சொல்லப்படுகின்றன. திருவக்கரை கோயிலுக்குச் செல்பவர்கள் கல்மரப் பூங்காவையும் பார்த்து வருவது நலம்.– கோகுலகிருஷ்ணா

The post பிரச்னைகளை நேராக்கும் திருவக்கரை வக்ரகாளி appeared first on Dinakaran.

Tags : Tiruvakarai Vakrakali ,Thiruvakarai ,Thondai Nadu ,Devarpadal ,Villupuram district ,Vanur circle ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கும்...