×

மாலவன் நெறிநின்ற மாதர்குல மாணிக்கங்கள்!

வைணவ  மர பில் பெண்களுக்கு மிகப்பெரிய  ஏற்றம் உண்டு. வைணவ சம்பிரதாயமே சம்பிரதாயம் என்று சொல்லுவார்கள். பாகவதர்களும் ஆண்டாள் கோஷ்டிதான். பகவான் ஒருவனே பரம புருஷன். பகவானையே திருமகள் கேள்வன், திருவாழ்மார்பன் என்று, திருவாகிய பிராட்டியோடு இணைத்தே அழைப்பார்கள்.“திருவில்லா தேவரை தேரேன்” என்று தாயாரோடு கூடிய பெருமானையே வணங்குவார்கள். அதனால் பிராட்டியும் அவனை விட்டு அகலாமல் மார்பில் தங்கியிருக்கின்றாள். திருவோடு கூடிய எம்பெருமானிடம் தான் நம்மாழ்வார் சரணடைகிறார். அப்படிச் சரணாகதி செய்த பாசுரம்தான் திருவாய்மொழியின் உயிர்ப்  பாசுரமான அகலகில்லேன் இறையும் என்ற பாசுரம்.அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா,நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!  என்னை ஆள்வானே,நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.- என்ற இந்த பாசுரத்தில், ‘‘கொஞ்சமும் பிராட்டி உன்னை பிரியாது உன்னோடு இணைந்திருக்கும் திருவேங்கடத்தானே, உன் திருவடியே தஞ்சம்’’ என்று சரண் புகுகின்றார்.      இந்த மரபு ஆழ்வார் களிடமும் தொடர்கிறது.பதின்மருக்கு ஒரு பெண்பிள்ளை என்று ஆண்டாளை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது வைணவ மரபு.அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து- என்று உபதேசரத்தினமாலையில் ஆண்டாளின் நிகரற்ற பெருமையைப்பாடுகிறார், மணவாள மாமுனிகள்.அதன்பிறகு வைணவ குருபரம்பரை ஆரம்பிக்கிறது. அந்த குருபரம்பரையில் வைணவம் போற்றிய மாதர்களைப் பற்றிய நயமான செய்திகளும், வியப்பான வாழ்க்கைமுறைகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வைணவ மங்கையர்கள் எப்படி வைணவ தத்துவத்தின்படி வாழ்ந்தார்கள் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.அதில் சில வைணவ மங்கையர்கரசிகளைப் பற்றி நாம் காணப்போகிறோம்.1. கலியனை ஆழ்வாராக்கிய குமுதவல்லி நாச்சியார். ஆழ்வார்களில் கடைசி ஆழ்வார் பெயர் என்ன தெரியுமா? திருமங்கை ஆழ்வார்.கலியன், நீலன் என்ற பெயரில், சீர்காழிக்கு பக்கத்திலே ஆலிநாடு என்ற ஒரு நாட்டை ஆண்டவர்.அங்கே உள்ள திருவெள்ளக்குளம் என்கின்ற அண்ணன் கோயிலில் அவதரித்தவர் குமுதவல்லி நாச்சியார். அவரை எடுத்து வளர்த்தவர் அந்த ஊரில் உள்ள ஒரு மருத்துவர்.குமுதவல்லி நாச்சியாரை சந்தித்தபோது, அவரை மணக்க விரும்பினார். குமுதவல்லி நாச்சியார் இவர் வைஷ்ணவனாக இருந்தால்தான் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்ல, ஆழ்வார் இதனை அறிந்து கொண்டு, திருநறையூர் நம்பி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு நம்பியிடம் பஞ்ச ஸம்ஸ்கார தீட்சையைப்  பெற்றார். பின்னர் குமுதவல்லி நாச்சியார் ஆழ்வாரை மணந்துகொண்டார்.இரண்டாவது நிபந்தனையாக திருமங்கை ஆழ்வாரிடம், தன்னை திருமணம் செய்து கொண்டால், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு ததியாராதனை ஒரு வருடத்திற்காவது அளிக்க வேண்ட, ஆழ்வாரும் ஒப்புக்கொண்டார்.“வாளும், போரும்” என காலம் கழித்த நீலனை, நாளும் நாராயணனைப் போற்றி தமிழ் பாட வைத்தவர்தான் குமுதவல்லி நாச்சியார்.ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். ஆனால் திருமங்கையாழ்வார் விஷயத்தில் அவர் வெற்றிக்கு முன்னால் குமுதவல்லி நாச்சியார் வந்துவிடுகிறார்.திருமங்கையான குமுதவல்லி உருவாக்கிய ஆழ்வார் இவர். அதை இவர் பெயரே திருமங்கையாழ்வார் எனச் சொல்லும். அதனால்தான் தை அமாவாசைக்கு மறுநாள் நாங்கூர் 11 திவ்ய தேச கருடசேவை மங்களாசாசன உற்சவத்தில் குமுதவல்லி நாச்சியாரோடு அன்ன வாகனத்தில் அமர்ந்து தரிசனம் தருகின்றார் திருமங்கையாழ்வார். 12 ஆழ்வார்களில் இல்வாழ்க்கைத்  துணையான நாச்சியாரோடு  காட்சி தருபவர் இவர் ஒருவரே. திருவெள்ளக்குளத்தில் இவருக்கு தனிச் சந்நதி உண்டு. குமுதவல்லி நாச்சியார் சிறப்பு சொல்லாமல், திருமங்கையாழ்வாரின் பெருமை தனித்தே சொல்லமுடியாது.2. சுவாமி, அடியாள் எப்பக்கம் ஒதுங்க?ராமானுஜரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவமாக இக்கதை சொல்லப்படுகிறது. இப்படி ஒரு விஷயம் ஞானக்கடலான ராமானுஜர் வாழ்வில் நடந்திருக்குமா என்று ஐயம் எழும். ஆனால் இக்கதையின் கருத்து நம் எல்லோருக்கும் என்ன வைணவ தத்துவத்தைச் சொல்கிறது என்பது முக்கியம்.பொதுவாக ஞானிகள், சில நேரங்களில், பிறருக்காக அறிந்தும் அறியாதது போல் நடந்து கொள்வது உண்டு.தம்மை மிகவும் தாழ்த்தி கொள்வது உண்டு.“நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன்” என்று நம்மாழ்வாரும், “அடி நாயேன் நினைந்திட்டேனே” என்று திருமங்கை ஆழ்வாரும், ‘‘பேயனே யானும்” என்று குலசேகர ஆழ்வாரும் சொல்வதை வைத்துக்கொண்டு அவர்களுடைய ஞானத்தை நாம்  எடைபோட முடியாது. இப்பொழுது கதைக்கு வருவோம்.அவர் ஒரு திருக்குலமங்கை. ஒருமுறை ராமானுஜர் தனது சீடர்களுடன் திருவாலி திருநகரி சென்றுகொண்டிருந்தார். வழியோ ஒற்றையடிப்பாதை. இப்பொழுது போல் பேருந்து வசதி இல்லாத காலம் அது. பாதையில் நடந்து செல்லும் பொழுது எதிரே அந்த திருக்குலமங்கை  நடந்து வந்துகொண்டிருந்தாள்.ராமானுஜரின் சீடர்கள், ‘‘அம்மா சற்று வழிவிடு. ஒரு பக்கம் ஒதுங்கு. ஜீயர் போகவேண்டும்’’ என்று சொல்ல, ஞானத்தில் சிறந்த அப்பெண்மணி பளிச்சென்று பதில் கூறினாள் .‘‘ஐயா, நல்லது.ஒதுங்குகிறேன். ஆனால், நான் எந்தப் பக்கம் ஒதுங்குவது? முன்னால் ஞானக்கடலான ஜீயர். என் பின்னால் திருக்கண்ணபுரம் உள்ளது. வலப்பக்கம் திருமங்கையாழ்வார் வேடுபறி செய்த வேதராஜபுரம் உள்ளது. அவர் எட்டெழுத்து மந்திரத்தை பெற்ற அரசமரமும் உள்ளது.இதோ, என் இடப்பக்கத்தில் வயலாலி மணவாளன் திருக்கோயில் உள்ளது. என்னைச் சுற்றி எல்லா இடங்களும் புனிதமான இடங்களாக இருக்கிறது. உலகம் முழுதும் உலகமளந்தான் சந்நதியாய் இருக்கிறது. நான் எப்பக்கம் ஒதுங்குவது?  எனக்கு இடம் காட்டுங்கள்’’ என்று கேட்டதாக வருகிறது.ராமானுஜர் அந்த திருக்குலமங்கையின் ஞானத்திறனை வியந்தார்.“வைணவச் சின்னங்கள் அனைத்தும் உனக்கே தகும்” என்றார்.அப்பெண்ணும் ராமானுஜர் சீடரானாள்.3. காமுகனை மாற்றிய தெய்வ நங்கைராமானுஜர் பல திருத்தலங்களை வரிசையாக சேவித்துக்கொண்டு வந்தார். அவருடைய திவ்யதேச யாத்திரையில் அவரோடு பல சீடர்களும் வந்தனர். ஒரு நாள் அவர் செஞ்சிக்கு அருகே பருத்திக்கொல்லை என்னும் ஊரை அடைந்தார். அங்கே அவருடைய சீடர் வரதாச்சாரியார் என்பவர் இருந்தார்.அவரை எல்லோரும் அம்மாள் என்றே அழைப்பார்கள். காரணம் அவர் எல்லோரிடமும் தாயன்புகொண்டவர். மிகவும் கனிவாக நடந்து கொள்ளக்கூடியவர். இவரை பருத்திக்கொல்லையம்மாள் என்று அழைத்தனர். அவரு டைய துணைவியார் லட்சுமி அம்மையார். மஹாலஷ்மி போன்ற அழகு, குணம், ஞானம்.ராமானுஜர் தன் சீடர்களுடன் அங்கே சென்றிருந்தபொழுது பருத்திக்கொல்லை அம்மாள் வெளியே சென்றிருந்தார்.வீட்டில் தனியாக லட்சுமி மட்டுமே இருந்தார். வறுமையில் வாடும் வீடு என்பது பார்த்தவுடன் தெரிந்தது. ராமானுஜர் வெளியிலே நின்று தாம் வந்திருப்பதை சொல்லச் சொன்னார். அப்போது உள்ளேயிருந்து ஒரு பெண்குரல் வெளியே வராமல் கேட்டது.‘‘அவர் வெளியே சென்றிருக்கிறார், வந்துவிடுவார்”ராமானுஜர் நிலைமையைப் புரிந்துகொண்டார். ஏன் அந்தப் பெண் வெளியே வரவில்லை என்ற காரணத்தை தெரிந்துகொண்டு, தன்னுடைய ஆடையை எடுத்து வீட்டினுள் வீசினார்.அடுத்த சில நிமிடங்களில் இவர் தந்த ஆடையை உடம்பில் சுற்றிக்கொண்டு, ஏற்கனவே இருந்த ஆடை கிழிசல்களை மறைத்துக்கொண்டு, சற்று திருத்தமாக வந்து உடையவரை சேவித்தார்.‘‘சுவாமி. சற்று பொறுங்கள். இதோ தளிகை (உணவு) தயாராகிவிடும்’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார்.இத்தனை சீடர்களுக்கும் எப்படி ததியாராதனம் செய்வது என்கிற கவலை இருந்தது. சற்று யோசித்தபோது ஒரு கடுமையான வழி புலப்பட்டது. ஆவ்வூர் வணிகரிடம் சென்று தனக்கு தேவையான பொருட்களை அடியார்களுக்கு அமுது தயார் செய்யக் கேட்டார்.அந்த வணிகன் இலக்குமியின் அழகில் கண் வைத்திருந்தவன்.இதுவரை அவரை ஏறெடுத்துப் பார்க்காத இலக்குமி அம்மையார் இன்று வேறு வழியின்றி அவன் கடைக்கு சென்றார்.  அவரிடம் தன்னை இழந்தாவது உணவுப்பொருள் பெற்று வந்து அடியார்களுக்கு உணவிட வேண்டும் என்கின்ற ஒரே எண்ணமே இருந்தது. உணவுப்பொருள் பெற்று வந்து அடியார்களுக்கு படைத்தது விட்டு இந்த கேவல உடலை உதறிவிடுவோம் என்று லட்சுமி நினைத்தார்.வணிகன் தன் எண்ணம் நிறைவேறும் என தேவையான பொருட்களை தந்தான். இலக்குமி அம்மையார் அதைக் கொண்டு, விரைந்து உணவு சமைத்தார். உடையவர் உள்ளிட்ட வைணவ அடியார்களுக்கு உபசாரம் செய்யும்போது கணவர் பருத்தி கொல்லை அம்மாள் வந்துவிட்டார். நடந்ததை அறிந்தார். நேராக இருவரும் வணிகன் வீட்டுக்குச் சென்றனர்.வணிகன் காம எண்ணத்தோடு காத்திருந்தான்.அப்பொழுது உடையவரின் பாத தீர்த்தத்தை அவனிடம் தந்து ‘‘இந்தத்  தீர்த்தத்தின் ஒரு துளியைப் பருகு’’ என்று சொல்ல அவனும் அதைப் பருகினான். சிறிது தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டான். அடுத்த கணம் அவன் மனம் மாறியது. தான் செய்ய எண்ணிய கொடும் செயலை நினைத்து கதறி அழ ஆரம்பித்துவிட்டான்.இப்பொழுது லட்சுமிதேவி சாட்சாத் பிராட்டியாகவே அவன் கண்ணுக்கு தெரிந்தார்.பழைய காம எண்ணங்கள் முற்றிலும் அழிந்து புதுமனிதன் ஆனான்.அவர்களிருவரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, தான் செய்ய இருந்த பாவத்திலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தான். அவனையும் அழைத்து வந்து உடையவரின் சீடராகச் சேர்த்தனர். 4. அர்த்தத்தை அப்படியே எடுத்து கொள்ளக்கூடாதுஅக்கரைச் சடியார் என்று ஒரு கணிகை இருந்தாள். தான் செய்யும் இழிதொழிலை விட்டு விட்டு, நல்ல விதமாக வாழ வேண்டும் என்று எண்ணி, திருவரங்கத்தில் ஆசாரியராக இருந்த நம்பிள்ளையின் திருவடியை சரண் அடைந்தாள். நம்பிள்ளையும் மனம் திருந்தி வந்த அந்த மங்கையை அமரச்செய்து, அவளுக்கு நல்ல வார்த்தைகளைக் கூறினார். அதன்பிறகு அவர் தினசரி நம்பிள்ளையின் உரையைக் கேட்பதற்காக வந்துவிடுவாள். கடைசிவரை இருந்து கண்ணீர் மல்க உரையைக் கேட்டு தன்னுடைய இல்லம் செல்வாள்.ஒருமுறை நம்பிள்ளை தம்முடைய சொற்பொழிவில் சொன்னார்.‘‘ஒரு வைணவ அடியார் விரும்பும் பொருளை ஒரு அடியார் தர மறுக்கலாகாது. “எம்மையும் விற்கலாம்” என்பது போல, அவர்கள் எது செய்தாலும் சரி என்று நினைப்பது வைணவ அடியார்களுக்கு அழகு” என்று பல தத்துவங்களைச் சொன்னார். அதைக் கண்ணீர் மல்க கேட்டாள் அக்கரை சடியார். அடுத்தநாள் ஒரு சிலர் அவளை அடைய எண்ணி வைணவர்கள் போல் வேடமிட்டுக்கொண்டு அவள் இல்லத்தை அடைந் தனர். அவளை அடையும்  விருப்பத்தை வெட்கமில்லாமல் தெரிவித்து, ‘‘வைணவ அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது இன்னொரு அடியாரின் கடமை” என்று நம்பிள்ளை சொன்னதைத்தான் கேட்டாயே, என்று சொன்னவுடன், அவள் மனம் குழம்பியது.உடனே “நீங்கள் பிறகு வாருங்கள். உங்களுக்கு விடை சொல்கிறேன்” என்று அவர்களை அனுப்பிவிட்டு, நம்பிள்ளையிடம் வந்து நடந்ததைச் சொல்லி, “ஒரு வைணவ அடியார் விருப்பத்தை நிறைவேற்றுவது இன்னொரு வைணவ அடியார் கடமையல்லவா என்று சொன்னது எனக்குப் பொருந்துமா?” என்று கேட்க, நம் பிள்ளை நிதானமாகச் சொன்னார்.‘‘அம்மா, சில விவரங்களை அப்படியே நேருக்குநேர் அர்த்தப்படுத்திக்கொண்டு அனர்த்தம் ஆகிவிடக்கூடாது. இப்பொழுது ஒரு உதாரணம் சொல்லுகிறேன். உன்னுடைய அன்பு மகன் ஒருவன் பசி என்று வந்தால், நீ அவனுக்கு சோறிடுவாய். அவன் பசியைத்  தீர்ப்பாய்.ஆனால், அவனே மனநலம் இல்லாமல், உன்னிடம் வந்து, விஷம் குடிக்கிறேன் என்றால் என்ன செய்வாய்?”“ஐயோ மகனே உன் விருப்பம் . அதை நிறைவேற்றுவது தாயின் கடமை அல்லவா” என்று விஷத்தைக் கொடுப்பாயா? அதைப் போலத்தான் இந்த விஷயமும்.நல்ல செயல்களுக்குத்தான் நான் சொன்னது பொருந்தும். பொல்லாத செயல்களை ஏற்கக்கூடாது. அப்படி ஏற்றால் உனக்கும் பாவம் சேரும். அவர்களும் நரகம் அடைவார்கள். அவர்கள் எல்லாம் உண்மையான அடியார்கள் அல்ல. உண்மையான வைணவர்கள் இப்படிக் கேட்க மாட்டார்கள். அவர்கள் வேடதாரிகள்.” என்று விளக்கம் சொல்லி அனுப்பிவைத்தார்.அக்கரைச் சடியார் ஐயம்  நீங்கி தூய வாழ்வு வாழ்ந்து ஆச்சார்யன் திருவடி அடைந்தாள்.5.‘‘அடியாள் இங்கே இருக்கிறேன் இருட்டிலிருந்து ஒரு குரல்’’நம்பிள்ளை வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவமும் வைணவ உரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிள்ளைக்கு பல சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணியும்  இருந்தார். ஒருமுறை திருவரங்கத்திலிருந்து திருவெள்ளறையில் நடக்கும் உற்சவத்தைச் சேவிக்க நம்பிள்ளை சீடர்களுடன் புறப்பட்டார். இடையில் கொள்ளிடம் ஆறு பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க ஒரு ஓடமும் அன்று கிடைக்கவில்லை. ஆனால் ஒரு சிறு பரிசல் மட்டும் இருந்தது .எப்படியாவது பெருமாளைச்  சேவிக்க வேண்டும் என்று நினைத்த நம்பிள்ளை, சீடர்களோடு அந்தப் பரிசலில் ஏறிக்கொண்டார். பரிசல் மெல்ல நகர்ந்தது.ஆனால் திடீர் என்று காற்றும் மழையும் வந்து, பரிசல் பாரம் தாங்காமல் ஆடியது. அதிக நீர்வரத்து வந்ததால் பரிசல் சுழன்று தள்ளாடியது. பரிசல் ஓட்டி சொன்னான்.‘‘ஐயா பரிசல் தாங்கவில்லை. யாராவது ஒருவர் பரிசலில் இருந்து குதித்தால்தான் மற்றவர்கள் நிம்மதியாக கரையேறலாம்’’யாரும் குதிப்பதற்கு விரும்பவில்லை.அப்பொழுது நம்பிள்ளை சீடரான ஒரு பெண்மணி, ‘‘உலகம் வாழ வந்த ஆசாரியர் இருந்தால், பலபேர் ஆன்ம உயர்வு பெறுவர். நான் இருந்து என்ன பயன் இந்த உலகத்திற்கு? எனவே, என் ஆசாரியன் உயிரைக் காப்பாற்ற நான் குதிக்கிறேன்” என்று சொல்லி சடாரென்று நீரில் குதித்துவிட்டார்.நம்பிள்ளை ஏதும் செய்ய முடியாமல் விக்கித்து அதிர்ச்சி அடைந்தார். பரிசல் அக்கரைக்கு சென்று சேர்ந்தது. நம்பிள்ளையின் மனதில் சஞ்சலம் இருந்தது.‘‘ஐயோ ஒரு நல்ல உயிரை இழந்து விட்டோமே’’ என்று துக்கத்தோடு இருந்தார்.அப்பொழுது ஒரு குரல், ‘‘சுவாமி, அடியாள் இங்கே இருக்கிறேன்’’ என்று அந்த இருட்டில் கேட்டது.உடனே பரிசல் ஓட்டியை அழைத்து குரல் வந்த திசையைக் காட்டி, ‘‘அனேகமாக அந்த பகுதியில் இருக்க வேண்டும். நீ காப்பாற்றி அழைத்து வா’’ என்று அனுப்பினார்.அவனும் தேடிக் கண்டுபிடித்து அந்த அம்மையாரை பரிசலில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தான். நம்பிள்ளையின் திருவடிகளில் விழுந்து வணங்கினாள்.“வெள்ளத்தில் மூழ்கிச் செல்லும்பொழுது வழியில் ஒரு கோரைத் திட்டு இருந்தது. அதைப் பிடித்து ஏறிக்கொண்டேன். என்னுடைய ஆசாரியரே கோரைத் திட்டாக தோன்றி அடியாளைக் காப்பாற்றினார்”அந்தப் பெண்மணியின் ஆசாரிய பக்தி அத்தனை உயர்வானதாக இருந்தது.அப்பொழுது நம்பிள்ளை ஒரு வார்த்தையைச் சொன்னார்.‘‘அம்மணி, உன்னுடைய நம்பிக்கை அதுவாக இருந்தால், அப்படியும் நடந்திருக்கலாம்” விஷ்ணுபிரியா…

The post மாலவன் நெறிநின்ற மாதர்குல மாணிக்கங்கள்! appeared first on Dinakaran.

Tags : Malavan ,Andal Koshti ,
× RELATED 3 பேரை கொன்றதாக பிடித்து அடைப்பு...