×

திருமண தடை நீக்கும் உத்தவேதீஸ்வரர் ஆலயம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நகரின் நடுவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான உத்தவேதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி துரத்தி என வழங்கப்படுவது இயல்பு. காவிரியின் தென்கரையில் சிறப்பு பெற்ற ஊராக இருப்பதால் திருத்துருத்தி என்று பெயர் பெற்றுள்ளது. பழங்கால திருக்கோயிலின் மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தை கடந்து சென்றால் எதிரே இருப்பது கோயிலின் தல விருட்சமான உத்தால மரம். இது ஒரு வகை அத்தி மரமாகும். மரத்தின் அருகில் உள்ள மேடையில் ஒரு ஜோடி காலணிகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டுவருகிறது.சிவபெருமான் கயிலாயத்தில் இருந்து உமாதேவியை நிச்சயம் செய்ய இத்தலத்துக்கு வந்தபோது உடன் நிழல் கொடுப்பதற்காக தொடரந்து வந்த உத்தால மரத்தையும், காலணிகளையும் ஈசன் இங்கேயே விட்டு சென்றதாக ஐதீகம். உத்தாலம் என்பது தான் குத்தாலம் என்று மருவியதாக கூறப்படுகிறது. மூலவர் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கியபடி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் உத்தால ஈசுவரர் எனவும், உத்த வேதீஸ்வரர் எனவும் சொன்னவாறறிவார் பெருமான் எனவும் புகழப்படுகிறார். ராஜகோபுரம் அருகிலேயே தெற்கு பார்த்த தனிக் கோயிலில் அம்பிகை வீற்றிருக்கிறார். நின்ற கோலத்தில் காட்சி தரும் அன்னையை அரும்பன்ன வனமுலை நாயகி என்ற பெயரில் அழைக்கிறார்கள்.இத்திருத்தலத்தில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். உருத்திரன்மர் என்பவரை காசிக்கு செல்லவிடாமல் இத்தலமே காசிக்கு நிகரானது என்று பாம்பாட்டியாக சிவன் வந்து காட்சி தந்ததாக வரலாறு கூறுகிறது. பரதமா முனிவரின் கடுந் தவத்தால் பராசக்தி அவருக்கு மகளாக பிறந்தாள். சிவபெருமானை கணவனாக அடைய இத்தலத்துக் காவிரி கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார் அம்பிகை. இறைவன் தோன்றி அம்பிகையின் கரம் பற்ற முற்பட்டபோது என்னை வளர்த்த பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினாள்.இதையடுத்து நந்தியை அழைத்து பரதமா முனிவரிடம் சென்று திருமணம் பற்றி பேசிவரும்படி அனுப்பி வைத்தார் ஈசன். நந்தியும் முனிவரை சந்தித்து ஈசனுக்கு அம்பாளை மணம் முடித்து கொடுக்கும்படி கேட்டார். பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் பரதமா முனிவர். இதையடுத்து இறைவனுக்கும், அம்பாளுக்கும்  திருமணம் நிச்சயம் இந்த ஆலயத்தில் நடைபெற்றது என்றும், அதன்பிறகு அருகில் உள்ள திருமணஞ்சேரியில் திருமணம் நடைபெற்றது என்றும் தல வரலாறு கூறுகிறது. இதற்காக கயிலாயத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் வந்தபோது, விநாயகர் முன்செல்ல உத்தாலம் என்னும் மரம் சிவனுக்கு நிழல் தந்தபடியே பின் தொடர்ந்து வந்தது. அந்த மரமும், ஈசன் அணிந்து வந்த பாதுகையும் தான் இந்த ஆலயத்தில்  இருப்பதாகஐதீகம்.இத்தல இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டால் திருமண தடை நீங்கிவிடும் என்பது  நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு சூட்டிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடைநீங்கும். உள்பிரகாரத்தை வலம்வரும்போது தனிச்சன்னதியில் சனீஸ்வரரும், அவருக்கு நேர் எதிரில் விநாயகர் சன்னிதானமும் உள்ளன.சனிதோஷம் உள்ளவர்கள் பிரார்த்திக்க ஏற்ற தலம் இது. ‘காசிப முனிவர், கவுதமர், ஆங்கீரகர், புலத்தீயர், மார்க்கண்டேயன், அகத்தியர், வசிஷ்டர் ஆகிய சப்த முனிவர்களும், வருணன், காளி, அக்னி பகவான், காமன் ஆகியோரும் இங்கு வந்து இறைவனை வணங்கியுள்ளனர். விக்கிரம சோழ மன்னனின் மனைவி கோமளை என்பவளின் தொழுநோய் இந்த தல இறைவனின் அருளால் நீங்கியதாக தல வரலாறு கூறுகிறது. மேலும் இறைவனின் தோழரும், நாயன்மார்களில் ஒருவருமான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தோல் நோய் தீர்த்த தலமும் இதுதான்.திருக்கோயிலின் முன்புறம் படிக்கட்டுகளுடன் கூடிய ஆழமான தீர்த்தக்குளம் உள்ளது. இது சுந்தரர் தீரத்தக்குளம் என்று அழைக்கப்படுகிறது.  சுந்தரர் இத்தல இறைவனை வேண்டி பதிகம் பாடி தன் தோல் நோய் நீங்க வேண்டினார். பின்னர் இறைவனை நினைத்தபடி தீர்த்தக்குளத்தில் நீராடினார். நீரில் மூழ்கி எழுந்தபோது அவரது தோல் நோய் முற்றிலுமாக குணமாகி இருந்தது. இதனால் தீர்த்தம் அவரது பெயரிலே அழைக்கப்படலாயிற்று.மனத்தூய்மையுடன் திருத்துருத்தி சிவாலயத்தில் உள்ள சுந்தரர் தீர்த்தத்தில்  மூழ்கி எழுந்து சுந்தரர் பாடிய பதிகத்தை பாடி சுவாமியையும், அம்பாளையும் உருகி வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு சிவனை நினைத்து திருநீற்றினை உடல் முழுவதும் பூசி கொள்ள வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்து வந்தால் சரும நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. 48 நாட்களும் கோயிலுக்கு வர முடியாதவர்கள் முதல் நாள், கடைசிநாள் வந்து வழிபடலாம்.இக்கோயில் தருமபுர ஆதீனத்தின் ஆளுகையின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் ஒன்று. இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரையும் நடை திறந்திருக்கும். கோயில் மயிலாடுதுறையிலிருந்து தென்மேற்கே 10கி.மீ, கும்பகோணத்திலிருந்து கிழக்கே 30கி.மீ. தூரத்தில் உள்ளது. பஸ்சை விட்டு இறங்கிய உடன் நடக்கும் தூரத்திலேயே இத்தலம் உள்ளது….

The post திருமண தடை நீக்கும் உத்தவேதீஸ்வரர் ஆலயம் appeared first on Dinakaran.

Tags : Uddavetheeswarar ,Sambandar ,Sundarar ,Kutthalam ,Mayiladuthurai ,Nagai district ,
× RELATED நெல்லி மரப் பிள்ளையார்