×

மயிலார் என்றால் என்ன?

பொங்கலைத் தொடர்ந்து வரும் பண்டிகை மயிலார் என்பதாகும். உழைப்பாளி மக்கள் பொங்கலுக்குப் பிறகு மயிலார் வரை பணி செய்வதில்லை. அவை ஓய்வு நாட்களாகும். பொங்கலுக்கு வந்து விருந்து உண்பவர்களும் பொங்கலையொட்டி வெளியூர் செல்பவர்களும் இந்நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர்.பொங்கல் கழிந்த எட்டாம் நாள் மயிலார் கொண்டாடப்படுகிறது. தறி நெய்வோர், சலவையாளர் முதலிய உழைக்கும் வர்க்கத்தினர் இந்தப் பண்டிகையைச் சிறப்புடன் கொண்டாடுகின்றனர். வீட்டில் பூஜை மாடத்தின் சுவரில் கோவை இலைகளைக்  கொண்டு சதுரமாக தீற்றுவர். அது பச்சையான பின்னணியாக அமையும். அதன்மீது வெள்ளை வண்ணத்தால் தோகையை விரித்தாடிக் கொண்டிருக்கும் மயிலையும் அதன் முதுகில் வேலாயுதத்தையும் வரைவர். மஞ்சள் குங்குமத்தால் அதை அலங்கரிப்பர். அதன்மீது பூக்களை ஒட்டி அழகுபடுத்துவர்.சலவையாளர்கள் துணிவெளுக்கும் சால்களின் மீது மயில் படத்தை வரைந்து வழிபடுவதும் உண்டு.மயில் என்பது ஆயிரங்கண் பறவை எனப்படும். தொழிலில் ஆயிரம் விதமான நுணுக்கங்கள் உள்ளன. அதையே மயில் உணர்த்துகிறது. வேலை செய்யும் போது தேவையான நேரத்தில் அவை நம் நினைக்கும்வேலையைச் சிறப்பாக நடத்த உதவ வேண்டும். அத்தகைய நுணுக்கங்களை வேண்டிய போது அருளும் தேவதைகளையே நாம் மயிலாக உருவகம் செய்து வழிபடுகிறோம் என்பர். போர்க் கருவிகளில் துர்க்கை இருந்து போரில் வெற்றியை அளிப்பது போலவே தொழிற் கருவிகளில் மயிலம்மை உடனாய பல தேவதைகள் இருந்து நமக்கு அருள்கின்றன. அவற்றையே மயில் வடிவில் வணங்குகிறோம். இந்நாளில் இடப்படும் படையலில் மொச்சை, கொள்ளு, துவரை முதலான தானியங்களைக் கொண்டு செய்த குழம்பு,  கூட்டு ஆகியவற்றைப் படைக்கின்றனர்.சோற்றுக்குள் வைத்து ஆறு உருண்டைகளை உருட்டி ஆறு சிறிய உருண்டைகளைச் செய்து மயில் இறகின் துவிகளை முதன்மை இலையில் வைத்து படைக்கின்றனர். பூஜை முடிந்ததும் பெண்கள் இச்சோற்று உருண்டைகளை அப்படியே விழுங்கிவிடுகின்றனர். இதனால் நல்ல இல்லற வாழ்வு செழிக்கும் என நம்புகின்றனர்.இது தொழிற்கருவிகளில் உறையும் தெய்வங்களை நோக்கிச் செய்யப்படும் வழிபாடாகும். பணி செய்யும் போது தொழிற் கருவிகளால் காயம் ஏற்படாமலும், அவற்றில் சிக்கல் உண்டாகித் தொழில் பாதிக்காமல் இருக்கவும் தொழிலுக்குத் தேவையான நுணுக்கங்கள் தேவையான போது நினைவுக்குக் கொண்டு வந்துபயன் அளிக்கச் செய்வதற்காகவும், அதில் உறையும் தெய்வங்களை நோக்கிச் செய்யும் வழிபாடாகும். காலப்போக்கில் மயிலோடு தொடர்புடையதாக இருப்பதால் மயிலார் பண்டிகை முருக வழிபாட்டின் ஓர் அங்கமாக ஆகிவிட்டது.ஆட்சி லிங்கம்

The post மயிலார் என்றால் என்ன? appeared first on Dinakaran.

Tags : What is Mylar? ,Pongal is Mylar ,Pongal ,Mylar ,What is Mylar ,
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா