×

ஆண்டவரிடம் விசுவாசம் வையுங்கள்

ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் என்னும் திருவருட்சாதனம் வாயிலாக அவர் நம்மை தம் மக்களாக தேர்ந்தெடுத்திருக்கிறார். மேலும் மோசே வாயிலாக நமக்கு பல கட்டளைகளை கொடுத்து அவருக்கு ஏற்புடைய பிள்ளைகளாக வாழ நம்மை அழைத்துள்ளார். தம்முடைய மாட்சியாலும், ஆற்றலாலும் கடவுள் நம்மை அழைத்துள்ளார்.இயேசு கிறிஸ்துவை அறிந்துக் கொள்வதன் மூலம் இறைப்பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் தம் இறைவல்லமையால் நமக்கு அருளியுள்ளார். தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகை விட்டுவிலகி இறைத்தன்மையில் பங்கு பெறுவோமாக. இந்த இறைவாழ்க்கையை வாழ்வதற்காகவே நம்மை அழைத்துள்ளார். ‘‘ஆகையால், நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்’’. [2 பேதுரு 1 : 5  7] .எனவே நாம் எப்போதும் ஆண்டவர் மேல் நம்பிக்கையோடு இருப்போம். ஒரு கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட மலையை பார்த்து பெயர்ந்து போ என்றால் நகர்ந்து போகும் என்றார் நம் இயேசு கிறிஸ்து. ஒரு கடுகளவு விசுவாசத்திற்கே இவ்வளவு வல்லமை என்றால் அவர்மேல் மலை அளவு விசுவாசம் வைத்தால் எவ்வளவு வல்லமை என்பதனை நாம் அறியக்கடவோம்.ஆகவே, சகோதர சகோதரிகளே நாம் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். இந்த நிலையில் உறுதியாக நிற்க முழு முயற்சி செய்வோம். இவ்வாறு செய்தால் நாம் ஒருபோதும் தடுமாறமாட்டோம். அப்போது நம் ஆண்டவரும், மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவில் என்றும் நிலைக்கும் ஆட்சியில் பங்கேற்கும் உரிமை நமக்கு நிறைவாக அருளப்படும். இதை நாம் அறிந்து ஏற்றுக்கொண்ட உண்மையில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே நமது கிறிஸ்தவ அழைப்பை நிறைவாக ஏற்று மகிழ்ச்சியாய் கிறிஸ்துவின் அருளை பெறுவோம். ஆமென்.தொகுப்பு: ஜெரால்டின் ஜெனிபர்

The post ஆண்டவரிடம் விசுவாசம் வையுங்கள் appeared first on Dinakaran.

Tags : Lord ,Jesus Christ ,Moses… ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்