புதுடெல்லி : தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநில தேர்தல் ஆணையரின் பொறுப்பை மத்திய, மாநிலங்கள் சார்ந்த அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பது என்பது இந்திய அரசியலமைப்பையே கேலி செய்வது போன்றதாகும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.கோவா மாநிலத்தின் சட்டத்துறைச் செயலாளராக இருந்தவருக்கு மாநில தேர்தல் ஆணையரின் கூடுதல் பொறுப்பை அம்மாநில அரசு வழங்கியது. இது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்தது. இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கோவா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு அரசு ஊழியர் அல்லது அதன் அதிகாரத்துவம் கொண்ட நபரை மாநில தேர்தல் ஆணையராக நியமிக்க முடியாது. அதனால் கோவா மாநிலத்தின் தேர்தல் ஆணையராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக கோவா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கின் வாதங்கள் அனைத்தையும் பதிசெய்துக் கொண்ட நீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், பி.ஆர்.கவாய் மற்றும் ஹச்.ராய் ஆகியோர் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,’ மத்திய மாநில அரசாங்க அதிகாரிகளை மாநிலத்தின் தேர்தல் ஆணையராக நியமிக்கக்கூடாது. அவ்வாறு செய்வது என்பது கேலிக்கூத்தான ஒன்றாகும். இது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரான ஒன்றாகும். இதில் தேர்தல் ஆணையர்கள் என்பவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அந்த விவகாரத்தில் கண்டிப்பாக எந்தவித சமரசமும் கிடையாது. மேலும் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது என்பதால் அதில் அரசுகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும் என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இதுதொடர்பாக கோவா மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது….
The post மாநில தேர்தல் ஆணையர் பொறுப்பை அரசாங்க அதிகாரியிடம் ஒப்படைப்பது கேலிக்கூத்தானது : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.