வாஷிங்டன்: அமெரிக்க மீட்பு விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஆப்கன் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில், அங்கு ஆட்சி அமைக்க தலிபான்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன. தலிபான்களின் ஆட்சியில் கட்டுப்பாடுகள் கடுமையாக அதிகரிக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனை சமாளிக்க முடியாமல், அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் திணறி வருகின்றன. இந்த நிலையில் ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து நேற்று புறப்பட்ட அமெரிக்காவின் சி-17 விமானத்தில் ஆப்கன் நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் சென்றுள்ளார். ஆனால், நடுவானிலேயே அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விமானி காற்றழுத்தத்தை சீராக்க விமானத்தை தாழ்வாக பறக்கச் செய்து அப்பெண்ணின் உயிரை காத்துள்ளார். உடனடியாக விமானம் ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும் அப்பெண்ணிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தாயும், சேயும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
The post நடுவானிலேயே திடீர் பிரசவ வலி!: அமெரிக்க மீட்பு விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த ஆப்கன் பெண்..!! appeared first on Dinakaran.